Skip to main content

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் மீது போலீஸ் எஸ்ஐ சரமாரி தாக்குதல்! வாட்ஸ்அப் வீடியோவால் பரபரப்பு!!

Published on 27/09/2018 | Edited on 27/09/2018

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் சவாரிக்கு வந்த சுற்றுலா பயணிகளை போலீஸ் எஸ்ஐ ஒருவர் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் காவிரி ஆறு தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் ஆகும். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்கின்றனர். 

 

police

 

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (39), ரத்தினபிரகாஷ் (42), ராகுல் (17), கார்த்திக் (19) உள்பட 14 பேர் கொண்ட ஒரே குடும்பத்தினர், செப். 24, 2018ம் தேதியன்று ஒகேனக்கல்லுக்கு சுற்று வந்திருந்தனர். காவிரியில் நீர் வரத்து அதிகரித்ததால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் காலை 11 மணியளவில், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். முருகேசன் உள்பட ஏழு பேர் மட்டும் பரிசலில் செல்ல விரும்பினர். இதற்காக அவர்கள் ஒரு பரிசலில் ஏறினர். அப்போது பரிசல் ஓட்டிகள், ஒரு பரிசலில் 4 பேர் மட்டுமே செல்ல முடியும் என்று கூறினர். ஆனால் முருகேசன் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, ஏழு பேரையும் ஒரே பரிசலில் அட்ஜஸ்ட் செய்து அழைத்துச் செல்லும்படி கூறினார். 

 

 

இதில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அங்குள்ள ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒரு காவலர், அவர்களை சமாதானப்படுத்தினார். 

 

police

 

அதற்கு முருகேசன், தான் ஒரு வக்கீல் என்றும், ஊர்க்காவல் படை காவலருக்கெல்லாம் கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை என்றும் கூறி அவருடனும் வாக்குவாதம் செய்தார். மேலும், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வருவாய்த்துறை ஊழியர்கள் சிலரும் முருகேசனை சமாதானப்படுத்தி முயற்சித்தனர். அவர்களிடமும் தகராறு செய்துள்ளார் முருகேசன். 

 

 

இதுகுறித்து பரிசல் ஓட்டிகள், ஊர்க்காவல் படை காவலர் ஆகியோர் பென்னாகரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீஸ் எஸ்ஐ மாரி மற்றும் சில போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். விசாரணையில் முருகேசன், சென்னையில் வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக வேலை பார்ப்பது தெரிய வந்தது. 

 

 

மேலும், எஸ்ஐ மாரியுடனும் அவர் தகராறில் ஈடுபட்டார். அதனால் ஆத்திரம் அடைந்த எஸ்ஐ மாரி லத்தியால் முருகேசன் மற்றும் அவருடன் வந்த சிலரை திடீரென்று சரமாரியாக தாக்கினார். இதில் 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அங்கிருந்த சுற்றுலா பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோக்கள்தான் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக ஊடகங்களில் இரண்டு நாள்களாக வேகமாக பரவி வருகின்றன.

 

 

பின்னர் முருகேசன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை போலீசார் பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு முருகேசன், நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

 

 

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தர்மபுரி மாவட்ட எஸ்பி பண்டி கங்காதரிடம் கேட்டபோது, ''இது ஒரு பெரிய சம்வமே இல்லை. பிரச்னை செய்தவர்களில் சிலர் அன்று மது போதையில் இருந்தனர். உண்மையில், பரிசலில் 4 அல்லது ஐந்து பேருக்கு மேல் ஏறக்கூடாது. ஆனால் அவர்களில் 7 பேர் ஒரே பரிசலில் ஏறினர். அதை அங்கிருந்த பரிசல் ஓட்டிகளும், வருவாய்த்துறை ஊழியர்களும் எச்சரித்துள்ளனர். அதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

police

 

தகவல் அறிந்து, அதை தடுக்கச்சென்றபோதுதான் போலீசாரையும் அந்த கும்பல் தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர்.  குடிபோதையில் அவர்கள் போலீஸ் எஸ்ஐ மீது கைவைத்து தள்ளிவிட்டனர். அப்போது தற்காப்புக்காக எஸ்ஐ அவர்களை தாக்க நேர்ந்தது. அதில் உள்நோக்கம் ஏதுமில்லை. 

 

 

போலீசாரை தாக்கினால் வழக்கமாக 'ரிமாண்டு' செய்வோம். ஆனால் அன்று அவர்கள் குடிபோதையில் இருந்ததாலும், உடன் பெண்கள் இருந்ததாலும் அவர்களை சிறிது நேரம் போலீஸ் நிலையத்தில் உட்கார வைத்துவிட்டு எச்சரிக்கை செய்து அனுப்பி விட்டோம். போலீசார் தாக்கிய காட்சிகளை மட்டும் எடிட் செய்து வாட்ஸ்அப்பில் சிலர் வீடியோவை பகிர்ந்துள்ளனர். போலீசாரை அவர்கள் தாக்கியதை மறைத்துள்ளனர். 

 

 

கடந்த ஒரு வாரத்தில் லட்சம் பேர் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்களில் பலர் மது போதையில் இருக்கலாம்.... மற்றவர்களை பாதுகாக்கும் நோக்கில் அவர்களை போலீசார் தாக்கலாம்... இப்படி தினமும் ஏதோ ஒன்று நடந்து கொண்டுதான் இருக்கும். இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை,'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.