
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மற்றும் அவர் சார்ந்த அதிகாரிகளின் மீது தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அப்போது அத்துறையில் இருந்த அதிகாரிகள் மீது லஞ்சம் வாங்கியதாக அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி புகார் கொடுத்திருந்தார். அதில், சர்க்கரை மற்றும் பருப்பு பாமாயில் போன்றவற்றில் காமராஜ் மற்றும் அதிகாரிகள் பெரு ஊழலில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என புகழேந்தி, லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத் துறைக்கு கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில், ‘அதிமுக ஆட்சி காலத்தில் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்ட இந்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள், புகாரினை பதிவு செய்து விரிவான விசாரணை மேற்கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.