கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் அத்தியாவசிய பொருட்கள் மளிகை கடைகள், மருந்து கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.
தற்போது இந்த அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் நேரம் குறித்த புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை செயல்பட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஞாயிறு முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் பெட்ரோல் பங்குகளும் காலை 6 மணி முதல் 2.30 மணி வரை திறந்திருக்கும் என தெரிவித்துள்ளது. அதேபோல் ஸ்விகி, சோமேட்டோ போன்ற நிறுவனங்களும் நேர கட்டுப்பாடுகளுடன் செயல்படலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் மருந்தகங்களும் உணவகங்களும் (பார்சல் மட்டுமே வழங்கப்படும்) இவை இரண்டும் நாள் முழுவதும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.