Skip to main content

“நீதிமன்றத்தில் நீதி கிடைத்திருக்கிறது” - நயினார் நாகேந்திரன் பேச்சு!

Published on 22/06/2025 | Edited on 22/06/2025

 

Nayinar Nagendran says Justice has been served in court

மதுரையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக முருக பக்தர்கள் மாநாடு இன்று (22.06.2025) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில், “தமிழ் கடவுள் முருகன் என்று சொல்வது ஏனென்றால் அந்த முருகா என்பதில் மெல்லினம் இருக்கிறது. இடையினம் இருக்கிறது. வல்லினம் இருக்கிறது. ஒரு பெரும் தத்துவத்தின் சாறு எடுத்து நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து தந்தைக்கு உபதேசம் செய்த மலை எங்கள் தமிழ் திரு நாடு கண்ட சுவாமிமலை என்று சொல்லியிருக்கிறோம்.

அதுதான் அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா முருகன். சொக்கநாதர் பூமியில் இருந்து இன்றைக்கு ஒன்று கூடி இருக்கிறோம். ஆலவாய் நகரம் என்று அழைக்கின்ற அன்பான நகரம் மதுரை. இது தூங்கா நகரம் என்றும், நான்மாடக்கூடல் என்றும், 4 மாசி வீதிகளும், 4 சித்திரை வீதிகளும், 4 ஆவணி வீதிகளிலும், 4 வெளி வீதிகளிலும் இன்றைக்கு நடனமாடிக் கொண்டிருக்கின்ற மாபெரும் மதுரை மண்ணில் இன்றைக்கு நீதி கிடைத்திருக்கிறது. ஆனால் கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டாள். ’ ‘யானோ அரசன் யானோ கள்வன்’ என்று பாண்டிய மன்னன் மாய்ந்தான். கண்ணகிக்கு நீதி கிடைத்தது. தமிழ்நாட்டில் நீதி கிடைக்கிறதோ இல்லையோ. நீதிமன்றத்தில் இன்றைக்கு நீதி கிடைத்திருக்கிறது. வெற்றிவேல் முருகனுக்கு.... வெற்றிவேல் முருகனுக்கு..... (அங்கிருந்தவர்கள் அரோகரா... என்று திருப்பி சொன்னார்கள்).

முருகன் என்று சொன்னால் அழகு என்று பொருள். தொல்காப்பியத்தில் பத்துப்பாட்டு இருக்கிறது. பத்துப்பாட்டில் முதல் பாடல் நக்கீரனால் உருவாக்கப்பட்டது. திருமுருகாற்றுப்படை. திருமுருகாற்றுப்படை ஆற்றுப்படுத்துதல் என்று சொன்னால் இன்றைக்கு மதுரை மண்ணிற்கே மிகப்பெரிய பெருமை. அது மட்டுமல்ல அருணகிரிநாதரைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அருணகிரிநாதருடைய வரலாற்றைப் படித்துப் பார்த்தோம் என்றால் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆனால் முருகப்பெருமான் ஆட்கொண்ட பிறகு அவர் பாடிய பாடல் திருப்புகழ், ‘முத்தை தரு பத்தி திருமகன்...’ என்ற பாடல் அதுக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய ஒரு வழிகாட்டுதலாக ஆறுதலாக அமையும்.

இதெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். திருப்புகழைப் பாடினால் எல்லோருக்கும் கேட்கிறேன் இங்கே 3 முதல் 4  லட்சத்துக்கு மேலாக வந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் வாய் மணக்கும் என்று சொன்னால் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும். அப்படிப்பட்ட திருப்புகழை அருணகிரிநாதர் உருவாக்கித் தந்த அற்புதமான முருகப்பெருமானின் புகழை எல்லாம் பரப்புகின்ற இந்த நிகழ்வு என்பது உண்மையிலேயே இன்றைக்கு எல்லோரும் மலைத்துப் போயிருக்கிறார்கள். எத்தனையோ தடங்கல் பண்ண வேண்டும் என்று நினைத்தார்கள். தடைக் கற்கள் எல்லாம் படிக்கற்களாக மாற்றி இன்றைக்கு இவ்வளவு பெரிய நிகழ்வை நடத்திக்கட்டிருக்கிறார்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்