Skip to main content

அரசு நடவடிக்கைகளில் தலையிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எச்சரிக்கை விடுத்த நாராயணசாமி!

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 

narayanasamy about kiranbedi

 

 

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவதற்கும், ஆவணங்களை கோருவதற்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட செயல்பாடுகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதமானது’ எனக்கூறி அந்த அறிவிப்பினை ரத்து செய்தார்.

அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசும், கவர்னர் கிரண்பேடியும் மேல்முறையீடு செய்தனர். அதில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அந்த மேல்முறையீடு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 26-ஆம் தேதி நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். மேலும் அதுவரை தனி நீதிபதி உத்தரவு நடைமுறையில் இருக்கும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எனவே நீதிமன்றத்தின் உத்தரவை மீறி புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டாலோ, அதிகாரிகளை அழைத்து உத்தரவிட்டாலோ, சமூக வலைதளங்களை பயன்படுத்தினாலோ துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன்" என நாராயணசாமி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்