Skip to main content

அன்னை தெரசா பல்கலையை சீரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் - அன்புமணி

Published on 03/08/2018 | Edited on 03/08/2018

 

an


 அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து, அங்கு நடந்துள்ள ஊழல்கள் குறித்து கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ். இது குறித்த அவரது அறிக்கை: 

தமிழகத்தில் மகளிர் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. புனிதமானவர் பெயரில் இயங்கும் உயர்கல்வி நிறுவனத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து பலமுறை எச்சரித்தும் அதன்மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

 

அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் எந்தவித கல்வி வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படாதது குறித்தும், அனைத்து நிலைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவது குறித்தும் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் புள்ளி விவரங்களுடன் விரிவாக விளக்கியிருந்தேன். தொலைதூரக் கல்வி முறையில் விடைத்தாள்களில் திருத்தம் செய்து கூடுதல் மதிப்பெண் வழங்க தனியாக லஞ்சம், பகுதி நேரப் படிப்பில் எம்.பில் ஆய்வுப் பட்டம் வழங்குவதற்கு லஞ்சம், பகுதி நேர எம்.பில் படிப்பு பயிலும் 1532 மாணவிகளிடம் வாய்மொழித் தேர்வு நடத்தாமலேயே, நடத்தியதாகக் கூறி மதிப்பெண் வழங்க மொத்தம் ரூ.30 லட்சம் கையூட்டு வசூலிக்கப்பட்டது என பல்வேறு புகார்கள் கூறப்பட்டிருந்தன. ஆனால், இன்று வரை அக்குற்றச்சாற்றுகள் மீது தமிழக அரசோ, பல்கலைக்கழக வேந்தரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஊழல்களுக்கு யாரெல்லாம் காரணம் என்று தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறதோ, அவர்கள் தான் இப்போதும் இடையூறின்றி ஊழல் ராஜ்யம் நடத்தி வருகின்றனர்.

 

அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளியும், பதிவாளர் சுகந்தியும் அப்பதவிகளுக்கு தகுதியற்றவர்கள். ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் தான் இவர்களுக்கு இந்த பதவிகள் கிடைத்தன. இவர்களின் ஊழல்களுக்கு துணையாக இருக்கும் பொருளாதாரத்துறை பேராசிரியர்கள் கலைமதி, சுந்தரி ஆகிய இருவரும் ஓய்வு பெற்ற பின்னரும் தேவையின்றி  இரு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்கள் மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டால், அதற்காக  அவர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தில் ஓய்வூதியம் பிடித்தம் செய்ய வேண்டும். ஆனால், இருவருக்கும் எந்த பிடித்தமுமின்றி தொகுப்பூதியம், ஓய்வூதியம் ஆகிய இரண்டும் வழங்கப்படுகின்றன. 

 

அதுமட்டுமின்றி, பேராசிரியர் கலைமதி துணைவேந்தரின் கல்வி ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.  துணைவேந்தர் என்பவர் கல்வியில் சிறந்தவராகத் தான் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவருக்கே கல்வி ஆலோசனை வழங்குவதற்காக கலைமதி நியமிக்கப்பட்டிருப்பது இதுவரை வேறு எந்த பல்கலைக் கழகத்திலும் நடக்காத ஒன்றாகும். துணைவேந்தர், பதிவாளர் ஆகிய இருவரையும் பொம்மையாக வைத்துக் கொண்டு இவர்கள் இருவரும் தான் சென்னையிலும், கொடைக்கானலிலும் இருந்தவாறு பல்கலைக்கழக நிர்வாகத்தை ஆட்டிப்படைக்கின்றனர். பதவி உயர்வு முதல் பணியிட மாற்றம் வரை  இவர்கள் இருவருக்கும் பணம் கொடுத்தால் மட்டுமே நடக்கும். பல்கலைக்கழக விதிப்படி குளிர் நிறைந்த கொடைக்கானல் வளாகத்தில் பணியாற்றுபவர்களுக்கு மட்டும் தான் மலைப்பணி படி, குளிர்காலப் படி ஆகியவை வழங்கப்பட வேண்டும். ஆனால், துணைவேந்தர் மற்றும் அவரது ஆலோசகர் கையூட்டு வாங்கிக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சென்னை, மதுரை, கோவை ஆகிய ஊர்களில்  உள்ள விரிவாக்க மையங்களுக்கு பணியிட மாற்றம் வழங்குவதுடன், அவர்களுக்கு விதிகளை மீறி மலைப்பணி படி, குளிர்காலப் படி ஆகியவற்றையும் வழங்கி பல்கலை.க்கு இழப்பை ஏற்படுத்துகின்றனர்.

 

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர் பணிக்கான செட் தேர்வை அன்னை தெரசா பல்கலைக்கழகம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் நடத்தியது.  04.03.2018 அன்று நடத்தப்பட்ட செட் தேர்வுகளின் இரண்டாம் தாளில் கேட்கப்பட்ட 50 வினாக்களில் 43 வினாக்கள் அதற்கு முந்தைய இரு தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும். சிலர் எளிதாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டதாகவும், இதன் பின்னணியில் ஊழல் நடந்திருக்கலாம் என்றும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. மேலும், அன்னை தெரசா பல்கலை. சார்பில் கடந்த இரு ஆண்டுகளாக நடத்தப்பட்ட செட் தேர்வில் தேர்ச்சி வழங்குவதற்காக ஏராளமானோரிடமிருந்து தலா ரூ. 6 லட்சம் கையூட்டு வாங்கப்பட்டதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.

 

பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்திலும் ஊழல்கள் நடந்துள்ளன. ரூசா எனப்படும் தேசிய உயர்கல்வி திட்டப்படி பல்கலைக்கழக வளர்ச்சிக்கு வழங்கப்பட்ட நிதியிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. இவை குறித்து அரசிடம் புகார் செய்தும்  நடவடிக்கை இல்லை. ஆளுனர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட புகார் மனுக்களும் குப்பையில் வீசப்பட்டுவிட்டன. பல மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி வரும் ஆளுனர், அதற்கு பதிலாக  பல்கலைக்கழகங்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். முதல்கட்டமாக அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து, அங்கு நடந்துள்ள ஊழல்கள் குறித்து கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.’’

சார்ந்த செய்திகள்