Skip to main content

"அமைச்சரை காணவில்லை!!!" -வாட்ஸ் அப்பில் பதிவிட்ட ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் உட்பட 2 பேர் கைது!

Published on 18/06/2020 | Edited on 18/06/2020
Missing Minister” - 2 people arrested, including husband of municipal council leader

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ளது மேல்குமாரமங்கலம் கிராமம், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சொந்த ஊர். இந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் மகாலட்சுமி, அவரது கணவர் பாலாஜி. கடந்த ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மேல்குமாரமங்கலம் என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் குழு அமைத்திருந்தார். அந்த குழுவில் உள்ள பாலாஜி, அமைச்சர் சம்பத்தை காணவில்லை என்று வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளார். அதில் அதிருப்தியடைந்த அப்பகுதி அ.தி.மு.க கிளை செயலாளரும், அமைச்சர் சம்பத்தின் அக்கா மகனுமான ரஜினி என்பவர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் போலீசார் பாலாஜி மற்றும் வாட்ஸ்அப் குழு அட்மின் ஆறுமுகம் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, பல மாதங்களாக தேடி வந்தனர். அதேசமயம் இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார், கடலூர் மெயின்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கொண்டிருந்த இருவரை பிடித்து சந்தேகத்தின்பேரில் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் மேல்குமாரமங்கலம் சேர்ந்த பாலாஜி(36), ஆறுமுகம்(33) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர் சம்பத்தை காணவில்லை என வாட்ஸ் அப்பில் பதிவு செய்தவர்கள் இவர்கள்  என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அமைச்சரை விமர்சனம் செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.