நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒட்டுப்பட்டரை பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவரும் குன்னூர் அம்பிகைபுரம் பகுதியைச் சேர்ந்த அனிஷா என்பவரும் ஆட்டோவில் பல்வேறு பகுகுதிகளுக்குச் சென்று முட்டை, டீ தூள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் குன்னூரிலிருந்து கோத்தகிரி நோக்கி வந்தபோது, வண்டிசோலை பகுதியில் கோத்தகிரியைச் சேர்ந்த இளம்பெண் கட்டபெட்டு பகுதிக்குச் செல்வதற்காக நின்றுகொண்டிருப்பதை பார்த்த அவர்கள் இளம் பெண்ணை வாகனத்தில் ஏற்றி உள்ளனர்.
பின்னர் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி அவரது தங்க நகைகளை பறித்ததோடு அவரை அடித்துக் காயப்படுத்தியுள்ளனர். பின்னர் அவர்களது ஆட்டோ கூக்கல்தொரை பகுதியில் வந்தபோது கடத்தப்பட்ட இளம்பெண் கூச்சலிட்டுள்ளார்.
அதைக் கேட்ட பொதுமக்கள் ஆட்டோவை தடுத்து நிறுத்தி இளம் பெண்ணை மீட்டனர். மேலும், கடத்திய ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த இளம்பெண்ணைக் கையும் களவுமாகப் பிடித்து கோத்தகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்த போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி முனையில் இளம்பெண் கடத்தப்பட்டிருப்பது கோத்தகிரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.