
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் அனைத்து முயற்சிகளையும், இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இருப்பினும், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் என 16 உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜோரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் அரசு அதிகாரியான மாவட்ட கூடுதல் மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தாப்பா மற்றும் பொதுமக்கள் 4 பேர் உள்ளிட்ட மொத்தம் 5 பேர் பலியாகினர். அதே நேரத்தில், ஜம்முவின் 7வது படைப் பிரிவைச் சேர்ந்த 8 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் 300 இருந்து 400 ட்ரோன்கள் அனுப்பி தாக்குதல் நடத்த முயன்றதாகவும், அதில் சில ட்ரோன்கள் துருக்கியில் இருந்து வாங்கப்பட்டவை எனவும், அதனை இந்திய ராணுவம் அழித்து முறியடித்ததாகவும், லெப்டினன்ட் கர்னம்ல் சோஃபியா குரேஷி இன்று (09-05-25) தகவல் தெரிவித்திருந்தார். இரு நாடுகளுக்கும் இடையே பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருவதால் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது. அதனால், பாகிஸ்தான் ஒட்டிய எல்லை மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கிருக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவிற்கு எதிராக நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் போராகவே கருதப்படும் என மத்திய அரசு தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய அரசு தெரிவித்ததாவது, ‘ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் தாக்குதல் போர்ச்செயலாகும். இந்திய மக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் ஆயுத தாக்குதல் போர்ச் செயலாக கருதப்படும். இந்தியா மீது எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு தீவிரவாத செயலும் போராகவே கருதப்படும். பயங்கரவாத தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.