Skip to main content

‘10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் தகவல்!

Published on 16/10/2024 | Edited on 16/10/2024
Met Dept says Chance of rain in 10 districts 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை (17.10.2024) அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. அதே சமயம் சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதனால் சென்னைக்கான ரெட் அலர்ட் திரும்பப் பெறப்படும் எனக் கருதப்பட்டது. இத்தகைய சூழலில் தான் வானிலை ஆய்வு மையம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று (16.10.2024) மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இது தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியின் ஒரு சில இடங்களில் இரவு 10 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்