மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரி கேள்வியை எழுப்யுபிள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், 'மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டியது. ஆனால், மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிகள் இதுவரை தொடங்கவில்லை. ஆகவே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிதியை ஒதுக்கிப் பணியைத் துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று (18/12/2020) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. நிலத்தைக் கையகப்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பதால் தாமதம் ஏற்படுவதாக வாதிட்டார்.
இதற்கு நீதிபதிகள், சுமார் இரண்டு ஆண்டுகளாகியும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? மதுரையில், குறிப்பாக தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் அரசுக்கு ஆர்வம் இல்லை என்றே தெரிய வருகிறது. இந்த வழக்கில் இரண்டு மாதங்களாகியும் முறையாகப் பதில் அளிக்காதது வருத்தம் தருகிறது. இதேநிலை தொடர்ந்தால், சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிடும் எனக் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தனர்.