
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ள பையூரைச் சேர்ந்தவர் இந்துமதி. இவருக்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரசன்னா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்துமதி, பையூரில் உள்ள தனது தந்தை கிருபாநிதி வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்வரி, சன்மதி என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்துமதி, தனது தந்தை கிருபாநிதிக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக வீட்டைப் பூட்டிக் கொண்டு புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பக்கத்து வீட்டுக்காரர்கள் கிருபாநிதி வீட்டின் முன்பக்க கதவு உடைந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இந்துமதிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அங்கு வந்த இந்துமதி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இந்துமதி திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து திருவெண்ணை நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், கொங்கராயனூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் மனைவி ராகப்பிரியா, தனது வீட்டை பூட்டிக்கொண்டு காந்தி குப்பம் கிராமத்தில் நடந்த திருவிழாவுக்குச் சென்றுள்ளார். திருவிழா முடிந்து, இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து ஒரு பவுன் செயின், ஒரு பவுன் கம்மல் மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்த ராகப்பிரியா, அளித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.