டெல்லி சாணக்கியாப்புரி தமிழ்நாடு புதிய இல்லம் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (31/03/2022) பகல் 01.00 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், ஜி.எஸ்.டி. இழப்பீடு மற்றும் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மேகதாது அணைத் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது உள்ளிட்டக் கோரிக்கைகளை முதலமைச்சர் முன் வைக்க உள்ளார்.
அதைத் தொடர்ந்து, பிற்பகல் 02.30 மணியளவில் மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து, தமிழக நெடுஞ்சாலைத் திட்டங்கள், சுங்கச்சாவடிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, மாலை 03.30 மணிக்கு சந்திக்கும் முதலமைச்சர், தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக, ஆலோசிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு, மாலை 04.30 மணியளவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். ஏப்ரல் 1- ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், மாலை 04.30 மணிக்கு மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் சந்தித்துப் பேச உள்ளார். அன்றைய தினமே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசவும் முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ.யின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் தமிழ்நாடு இல்லத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்க உள்ளனர்.