
காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் (வயது 32). இவரது மனைவி வேண்டா (வயது 26). இவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து வேண்டா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மேலும் சந்தானம் மதுவுக்கு அடிமையாகி உள்ளார். இதனால் மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்துவதும், நடத்தையில் சந்தேகப்பட்டும் வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் சந்தானம் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரது மனைவி ஆத்திரம் அடைந்துள்ளார். மேலும் மேலும் சந்தானம் வேண்டாவிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த அம்மிக் கல்லைத் தூக்கி சந்தானத்தின் தலையில் போட்டுள்ளார். மேலும் ஆத்திரம் அடங்காமல் பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து சந்தானத்தின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சந்தானம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து கணவன் உயிரிழந்ததை அறிந்த வேண்டா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். குடித்துவிட்டு வந்து தகராறு செய்த கணவரை கொன்றுவிட்டு மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.