Skip to main content

கள்ளக்குறிச்சி காட்டில் பெண் எலும்புக்கூடு! தீவிர விசாரணையில் காவல்துறை!

Published on 20/07/2020 | Edited on 20/07/2020

 

skeleton of a unknown woman found in kallakurichi forest range

 
கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் வனத்துறை காட்டில் உள்ள கற்பாறைகளுக்கிடையே ஒரு பெண்ணின் எலும்புக்கூடு புடவையால் மூடப்பட்டிருந்ததை அப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள் தற்செயலாக பார்த்து, வனக்காப்பாளர் நெல்சன் மண்டேலாவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் உடனடியாக வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். 

 

இதையடுத்து கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. (பொறுப்பு) விஜயகுமார், வரஞ்சரம் உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம் மற்றும் காவலர்கள் எலும்புக்கூடு கிடந்த அந்த இடத்தை பார்வையிட்டதோடு விழுப்புரம் தடய அறிவியல் துறை இயக்குநர் சண்முகத்தை சம்பவ இடத்திற்கு வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர். 

 

வனத்துறை காட்டில் ஒரு பெண் எலும்புக்கூடு கிடந்துள்ளது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் அங்கு எப்படிச் சென்றார், அவர் அங்கு தனியாக சென்று தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததா என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

 

இறந்துபோன அந்த பெண்ணின் உடலைக் காட்டில் உள்ள விலங்குகள் கடித்து சேதப்படுத்தியுள்ளன என்று தடய அறிவியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அந்த பெண்ணின் எலும்பு கூட்டை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். 

 

இதுகுறித்து மலைக்கோட்டாலம் கிராம நிர்வாக அலுவலர் வசந்தன், வரஞ்சரம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்துபோன அந்தப் பெண் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை செய்து நடைபெறுகிறது. 

 

இப்பகுதி வனக்காடு லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்த வனப்பகுதி கள்ளக்குறிச்சி - சேலம் – பெரம்பலூர் - கடலூர் ஆகிய மாவட்ட எல்லைகளைத் தொட்டுச் செல்கிறது. இந்த காட்டில் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து முன்விரோதம் காரணமாக பெண்களைக் கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டுச் செல்லும் சம்பவங்களும் நடந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் பல மாவட்டங்களிலிருந்து இரவு நேரங்களில் இந்த வனத்தில் உள்ள மான், மயில், காட்டுப்பன்றி ஆகிய விலங்குகளைத் துப்பாக்கியுடன் இங்கு வந்து வேட்டையாடுகின்றனர். அப்படி வந்தவர்கள் வனத்துறையிடம் பிடிபட்டுள்ள சம்பவங்களும் நடந்துள்ளன. மொத்தத்தில் இந்த காடு குற்ற சம்பவங்கள் அரங்கேற்றப்படும் இடமாக உள்ளது. வனத்துறையினர் இந்த காட்டுப் பகுதியில் தீவிர கண்காணிப்பு செய்ய வேண்டும் என்று அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கூறுகின்றனர்
 

 

சார்ந்த செய்திகள்