Skip to main content

கூடா நட்பு... வெளிநாட்டில் சம்பாதித்த நகை, பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது விநாயம் பாடி. இந்த ஊரைச் சேர்ந்த விஜயரங்கம் மகன் பெருமாள். 24 வயதான இவர் வேலை நிமித்தமாக வெளிநாடு சென்று திரும்பியுள்ளார். இந்த நிலையில் அதே ஊரில் உள்ள திருமலை மனைவி கன்னியம்மாள் என்பவருடன் நெருக்கமாக பழகி உள்ளார். இதை பயன்படுத்தி கொண்ட கன்னியம்மாள் 8.50 லட்சம் பணம், ஐந்து சவரன் நகை ஆகியவற்றை பெருமாளிடம் ஆசை வார்த்தை பேசி பெற்றுக்கொண்டுள்ளார்.

 

Jewelry



இந்த நிலையில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட பெருமாள் தனது பணம் நகையை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இதனிடையே கன்னியம்மாள், பெருமாளை நயந்து பேசி நள்ளிரவில் சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று அவருக்கு மொட்டையடித்து அவரை உட்கார வைத்து மாந்திரீகம் செய்துள்ளார்.
 

இதனால் பெருமாள் பயந்து மிரண்டுள்ளார். வீட்டுக்கு வந்த பெருமாள் தனது செல்போனில் அழுதுகொண்டே பேசி அதனை பதிவு செய்துள்ளார். அதில், ''என்னிடம் பணம், நகைகளை பறித்துக்கொண்ட கன்னியம்மாள் சுடுகாட்டில் என்னை வைத்து பூஜை போட்டதிலிருந்து எனக்கு உடல் முழுவதும் எரிகிறது. தூக்கம் வரவில்லை. உடல் உபாதை அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் கன்னியம்மாள் தான். எனக்கு பில்லி சூனியம் வைத்து, மாந்திரீகம் செய்துள்ளார். அதிலிருந்து எனக்கு வாழவே பிடிக்கவில்லை'' என தனது சகோதரி தேவி பெயரை குறிப்பிட்டு அவருக்கு பேசியுள்ளார்.


 

 

மேலும், ''கன்னியம்மாளோடு பழகிய எனக்கு பெரிய பெரிய கொடுமை செய்துள்ளார். அவரும், அவர் மகனும் சேர்ந்துதான் செய்துள்ளனர். அவர்கள் இருவரும் தான் என் சாவுக்கு காரணம். இனிமேல் எனக்கு வாழவே பிடிக்கவில்லை. எனவே தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். நீ அம்மாவை நல்ல முறையில் பார்த்துக்கொள், அதேபோல் தம்பியும் நன்றாக பார்த்துக் கொள், இதை யாரிடமும் சொல்வதற்கு அவமானமாக உள்ளது. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன்'' என்று வீடியோவில் பேசி தனது சகோதரி தேவிக்கு அனுப்பிவிட்டு பெருமாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 

இதையடுத்து காவல் நிலையத்தில், கன்னியம்மாள் அவரது மகன் சூர்யா ஆகியோர் மீது பெருமாள் சகோதரி தேவி புகார் அளித்துள்ளார். பெருமாளது உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். அதேநேரத்தில் பெருமாள் தற்கொலைக்கு காரணமான கன்னியம்மாள் அவர் மகன் சூரியா ஆகியோரை ஏன் கைது செய்ய வில்லை என்பதை கண்டித்து பெருமாளின் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டனர். 

 


 

சார்ந்த செய்திகள்