Skip to main content

இளையராஜா உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்!

Published on 14/08/2017 | Edited on 14/08/2017

இளையராஜா உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் மற்றும் தமிழர் உட்பட 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.  சோபியான் மாவட்டம், அவ்நீரா கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படை வீரர்கள் சனிக்கிழமை மாலை அந்த கிராமத்தை சுற்றி வளைத்தனர்.

அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பி.இளையராஜா என்றும் மற்றொருவர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

தவீரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் இளையராஜா சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த கண்டனியைச் சேர்ந்தவர். இதையடுத்து இளையராஜாவின் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் மதுரை கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். பின்னர், ராணுவ வாகனம் மூலம் இளையராஜா உடல் அவரது சொந்த ஊரான கண்டனிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிவகங்கை கலெக்டர் மலர் விழி, போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

ராணுவ மரியாதையுடன் இளையராஜாவின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னாள் ராணுவ படை அதிகாரி செல்வமூர்த்தி முன்னின்று செய்து வந்தார்.வீரமரணமடைந்த ராணுவ வீரர் இளையராஜா உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

இளையராஜாவின் பெற்றோர் பெரியசாமி-மீனாட்சி. இளையராஜாவுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தான் செல்வி (வயது 23) என்பவருடன் திருமணம் நடந்தது. தற்போது செல்வி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

சார்ந்த செய்திகள்