
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
போக்குவரத்துத் துறையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு காவலில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித்துறை மதிப்பீட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அசோக் புதிதாகக் கட்டிவரும் வீட்டின் சந்தை மதிப்பு, பரப்பளவு, கட்டுமான செலவுகள் குறித்து மதிப்பிடும் பணி குறித்து ஆய்வு செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் மணியின் ஹோட்டலில் 2வது நாளாக இன்றும் ஆய்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.