Skip to main content

சேலத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர் கழுத்து அறுத்து கொலை!

Published on 07/05/2020 | Edited on 07/05/2020
INCIDENT IN SALEM... POLICE INVESTIGATION

 

சேலத்தில், வீட்டு மொட்டை மாடியில் படுத்துத் தூங்கிய கார் ஓட்டுநரை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மணியகாரனூர் பாண்டு நகரை சேர்ந்தவர் அபிஷேக் மாறன் (29). இவர் சொந்தமாக 3 கார்கள் வைத்துள்ளார். அவற்றை தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கொடுத்துள்ளார். அதே நிறுவனத்தில் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஜெபினா. காதல் திருமணம் செய்து கொண்ட இத்தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு ஆண்டுக்கு முன்பு பிரிந்து விட்டனர். அதன்பின் ஜெபினா, வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.


அபிஷேக் மாறனின் தந்தை மாறன், முன்னாள் ராணுவ வீரர். 2004ம் ஆண்டு இறந்து விட்டார். தாயார் யசோதா, ராணுவத்தில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அபிஷேக், மணியனூரில் உள்ள பாட்டி கண்ணம்மாவுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் (மே 5) இரவு சாப்பிட்டுவிட்டு, வீட்டு மொட்டை மாடியில் சென்று படுத்து தூங்கினார். மறுநாள் காலையில் அபிஷேக்கின் உறவினர் ஒருவர் அவரை செல்போனில் அழைத்துள்ளார். பலமுறை முயற்சித்தும் அவர் அழைப்பை ஏற்காததால் அவரே நேரடியாக வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது மொட்டை மாடியில் அபிஷேக் மாறன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மர்ம நபர்கள், வீட்டின் படிக்கட்டு வழியாக மொட்டை மாடிக்குச்சென்று அங்கு கட்டிலில் படுத்திருந்த அபிஷேக் மாறனை கழுத்து அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். சடலத்தை, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட அபிஷேக் மாறனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு அபிஷேக், அன்னதானப்பட்டியில் இளம்பெண் ஒருவர் மீது காதல் தகராறில் ஆசிட் வீசினார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண் உயிர் பிழைத்தார். வழக்கில் இருந்தும் அபிஷேக் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கருவாட்டு மண்டியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர் தவிர மேலும் சில பெண்களுடனும் அபிஷேக்கிற்கு தொடர்பு இருந்துள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் யாராவது அபிஷேக்கை கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

 

ி



இச்சம்பவத்தில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கும் காவல்துறை, வழக்கை விசாரிப்பதற்காக தனிப்படையும் அமைத்துள்ளது. அபிஷேக்கின் நெருக்கமான நண்பர்கள், அவர் வேலை செய்து வந்த நிறுவனம், அன்றாடம் அவருடைய காரில் சென்று வரும் நபர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அபிஷேக்கின் செல்போனில் பதிவாகியுள்ள எண்களை வைத்தும், அவர் கடைசியாக யார் யாரிடம் பேசினார் என்ற ரீதியிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.