Skip to main content

''உனக்கா பேய் பிடிச்சிருக்கு''- காதலுக்காக பேய் நாடகம் ஆடிய இளம்பெண்ணை அடித்த திருநங்கை சாமியார்!- மனித உரிமை ஆணையத்தில் புகார்?

Published on 15/12/2019 | Edited on 15/12/2019

பேய் பிடித்தது போல் நடித்த இளம்பெண்ணை திருநங்கை சாமியார் பிரம்பால் அடித்து வெளுக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த திருநங்கை மதுர, இவர் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அருள்வாக்கு கூறி வருகிறார். இவரிடம் குழந்தையின்மை, தொழிலில் ஏற்படும் நஷ்டம், ஆண் பெண் வசியம் என பல்வேறு பிரச்சினைகளுக்காக மக்கள் வந்து அருள்வாக்கு கேட்டு செல்கின்றனர். இவர் தன்னிடம் அருள் வாக்கு கேட்க வருபவர்களை பிரம்பால் அடித்து மிரட்டி அவர்களுடைய வாயிலிருந்து உண்மையை வர வைத்து விடுவார் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 

salem


இப்படியிருக்க கடந்த வாரம் சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த பெற்றோர்கள் அவர்களுடைய மகளை அழைத்துக் கொண்டு திருநங்கை சாமியாரிடம் வந்துள்ளனர். தங்கள் மகளுக்கு பேய் பிடித்து உள்ளதாகவும், அதனை ஓட்ட வேண்டும் என்றும் அவரிடம் கூறியுள்ளனர். ஆரம்பத்தில் அந்த இளம்பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளது என்று நினைத்த அந்த திருநங்கை சாமியார் லேசாக அடித்து முடியை பிடித்து ஆட்டிக்கொண்டே நீ பேய்தான...  எங்க போற...  வந்த இடத்துக்கே போறியா இல்ல மயானத்துக்கு போறியா என மிரட்டலுடன் கேட்க அந்த இளம் பெண்ணும் நான் மயானத்துக்கு போகிறேன் என்று கூறியுள்ளார் வலி தாங்க முடியாமல்.

 

salem

 

இப்படி நடந்து கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளை வைத்து அந்தப் பெண்ணுக்குப் பேய் பிடிக்கவில்லை அவர் நடிக்கிறார் என்பதை கண்டுபிடித்த அவர் பிரம்பை எடுத்து அந்த இளம் பெண்ணை சரமாரியாக அடித்து உனக்கு பேய் பிடித்துள்ளதா என்று கத்தியபடி மிரட்டல் விட்டுள்ளார். அதன்பிறகு அந்த இளம்பெண் பக்கத்து ஊரில் உள்ள ஒரு இளைஞனை காதலித்து வந்ததும், வீட்டில் திருமண ஏற்பாடு செய்ததால் அந்த திருமணத்தை தவிர்ப்பதற்காக பேய் பிடித்தது போல் நாடகமாடியதையும் தெரிந்து கொண்ட அந்த திருநங்கை சாமியார் ''இது மனசுல ஒன்ன வச்சுக்கிட்டு இப்படி பேய் பிசாசு நடிப்பு நடிச்சுக்கிட்டு இருந்துகிட்டு பெத்தவங்களுக்கு தொந்தரவு கொடுத்துகிட்டு இப்படி இருக்கலாமா'' என கூறியபடியே அடிக்கிறார்.

 

salem

 

பிரம்படி அதிகமாகவதை கண்டு மிரண்ட  பெற்றோர்களோ சாமியின் அடிக்காதீங்க என்று கூற அவர்களிடமும் கோபமாக உன்னை அடித்து விடுவேன் என்று மிரட்டுகிறார். நீ எந்த இடத்திற்கு கொண்டு  போய் எத்தனை தாயத்து, மந்திரம் செய்தாலும் ஒன்றும் செய்யமுடியாது என்று மிரட்டியுள்ளார் திருநங்கை சாமியார்.

 

salem

 

பின்னர் அந்த பெண்ணை சரமாரியாக பிரம்பால் அடித்து வலுக்கட்டாயமாக காதலை கைவிட வேண்டுமென்று சத்தியம் செய்ய நிர்ப்பந்தித்தார். அந்த பெண்ணும் கடைசியில் நிர்பந்தம் காரணமாக இடது கையினால் சத்தியம் செய்தார். 

 

salem

 

இளம் பெண்ணை அடித்து துன்புறுத்திய இந்த சம்பவத்தை திருநங்கை சாமியாரே அவரது ஊழியரிடம் வீடியோ எடுத்து திருநங்கை சாமியாரின் அருள்வாக்கு மகிமை என்று பரப்பிவிடும் சொல்லியுள்ளார். ஆனால் தற்போது இதுவே அவருக்கு சிக்கலாக மாறி உள்ளது. இந்தச் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் தெரிவித்து வருகின்ற சமூக ஆர்வலர்கள் மனித உரிமை ஆணையத்திற்கு வீடியோவாக அனுப்பி புகார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்