Skip to main content

மதுவில் விஷம் கலந்து வைத்தது யார்? விவசாயி இறப்பில் மர்மம்!

Published on 30/08/2020 | Edited on 30/08/2020
incident in pudukottai

 

தோட்டத்தில் இருந்த மது பாட்டிலை திறந்து குடித்த விவசாயி சில மணிநேரத்தில் துடிதுடித்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடரும் சம்பவங்களால் விவசாயகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள ஆவணத்தான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ் ( வயது 48) இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். நேற்று மாலை தனது தோட்டத்தில் கடலை செடிகள் பறிக்கப்படுவதால் தனது அண்ணன் மகன் குமாருடன் தோட்டத்திற்கு சென்றவர் அங்குள்ள தனது கொட்டகையில் இரு மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில், சிப்ஸ், கடலை போன்றவை இருப்பதைப் பார்த்தவர் தனது மகன் அருண்பாண்டியனிடம் சொல்லி வீட்டிற்கு எடுத்து வரச் கூறியுள்ளார்.

அதில் ஒரு மது பாட்டிலை குமாரிடம் கொடுத்தவர் ஒரு மது பாட்டிலை திறந்து தான் குடித்த சற்று நேரத்தில் வாந்தி எடுக்கத் தொடங்கியவர் மதுவில் ஏதோ விஷம் கலந்திருப்பது போல உள்ளது அதனால் குமாரை மற்றொரு பாட்டில குடிக்க வேண்டாம் என்று சொன்னவர் தன்னை மருத்துவமனைக்கு கொண்டு போகச் சொன்னார்.

 

incident in pudukottai


அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு போகச் சொன்னார்கள் அங்கே போகும் போது இறந்திருந்தார். இவ்வளவு கொடிய விஷத்தை விவசாயிக்கு மதுவில் கலந்து வைத்தது யார் என்பது மர்மமாகவே உள்ளது.

இதேபோல கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருகில் 3 கி.மீ தூரத்தில் உள்ள குளமங்கலம் தெற்கு கிராமத்தில் ஒருவரும், அலஞ்சிரங்காடு கிராமத்தில் தந்தை மகனும் இதேபோல தோட்டத்தில் இருந்த மதுவை எடுத்து குடித்து துடிதுடித்து இறந்துள்ளனர். இந்தப்பகுதியில் இப்படி தொடரும் சம்பவத்தில் ஈடுபடும் மர்ம நபர்கள் யார் என்பதை இதுவரை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. இனிமேலாவது கண்டுபிடித்தால் அடுத்தடுத்து பலியாகும் விவசாயிகளின் உயிர்களை காப்பாற்றலாம்.

 

 

சார்ந்த செய்திகள்