இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திற்கிடையில் உள்ள பிரச்சனை தொடர்பாக சமரச பேச்சுவார்த்தை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இசைமைப்பாளர் இளையராஜா, கடந்த 42 ஆண்டுகளாக சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் வைத்து சுமார் 6000 பாடல்கள் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம், இளையராஜாவை ஸ்டியோவை காலி செய்ய அறிவுறுத்தியது.

இதன் காரணமாக இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டியோ நிர்வாகத்திற்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த இட உரிமை தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையேயான வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என இளையராஜா கோரிக்கை மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நீதிபதி பாரதிதாசன், இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டியோ நிர்வாகம் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வழக்கை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.