Skip to main content

காளி படத்தை வெளியிட ஐகோர்ட் தடை!

Published on 09/04/2018 | Edited on 09/04/2018
kaali

 

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் காளி. இப்படத்தை கதை, வசனம் எழுதி கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார். இப்படத்தை ரீலீஸ் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

விஜய் ஆண்டனி நடித்து வெளியான அண்ணாதுரை படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் உரிமையாளர் அலெக்சாண்டர்  வாங்கி ரீலீஸ் செய்தார். படம் நன்றாக வந்துள்ளது என விஜய் ஆண்டனி கூறியதை நம்பி அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார். படம் ரீலீஸ் ஆகும் நாள் வரை படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு விஐய் ஆண்டனி கூறிய படி அண்ணாதுரை படத்தை திரையிட்டு காண்பிக்கவில்லை.

 

முதல் மூன்று நாட்களில் அண்ணாதுரை படத்திற்கு சுமாரான  வசூல் இருந்தது. திரையிட்ட தியேட்டர்களில் முதல் வாரமே படத்தை எடுத்து விட்டு வேறுபடத்தை திரையிட்டனர். இதனால் அண்ணாதுரை படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை வாங்கி வெளியிட்ட பிக்சர் பாக்ஸ் கம்பெனி உரிமையாளர் அலெக்சாண்டர் அவர்களுக்கு 4 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது.

 

படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியிடம் இது சம்பந்தமாக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. அதற்கு மாற்றாக விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வரும் காளி படத்தை குறைந்த விலைக்கு தருகிறேன். அதை விற்பனை செய்து கடனை அடைத்துக் கொள்ளுங்கள் என விஜய் ஆண்டனியும் அவரது மனைவி பாத்திமாவும் கூறியுள்ளார்கள். அதற்கு உடன்பட்ட பிக்சர் பாக்ஸ் கம்பெனி உரிமையாளர் அலெக்சாண்டர் ஐம்பது லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்ட் போட்டு உள்ளார்.

 

எதிர்பாராத விதமாக திரையுலகில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருவதால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் புதிய படங்களை வாங்க தயக்கம் காட்டியதால் காளி படத்திற்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகையை பிக்சர் பாக்ஸ் கம்பெனி உரிமையாளர் அலெக்சாண்டரால் உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை. ஒப்பந்தப்படி பாக்கித் தொகை செலுத்த தவறியதால் காளி படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக விஜய் ஆண்டனி கடிதம் அனுப்பினார்.

 

அண்ணாதுரை படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை கேட்டு போன போது காளி படத்தை கட்டாயப்படுத்தி எங்களை வாங்க வைத்தது விஜய் ஆண்டனியும், அவரது மனைவியும் தான். இப்போது ஒப்பந்தத்தை காரணம் காட்டி அண்ணாதுரை படத்தில் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஒப்புக் கொண்டபடி கொடுக்காமல் ஏமாற்றப் பார்க்கிறார்கள். எனவே எனக்கு அண்ணாதுரை படம் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை கொடுத்து விட்டு காளி படத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் அலெக்சாண்டர் வழக்கு தொடுத்தார்.  ஏப்ரல் 11-க்குள் 4 கோடியே 73 லட்சத்தை அலெக்சாண்டர் அவர்களுக்காக நீதிமன்றத்தின் விஜய் ஆண்டனி செலுத்தி விட்டு காளி படத்தை ரீலீஸ் செய்ய வேண்டும்.   இல்லை எனில் படத்திற்கான தடை தொடரும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சார்ந்த செய்திகள்