
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியில் மூன்றாவது முறையாக, அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடவுள்ளார். இவர் அதிமுகவில் இருந்தபோது ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே 2001, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆனால் போடி தொகுதியில் இதுவரை போட்டியிடவில்லை. தற்போது துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை எதிர்த்து முதல் முறையாக நேருக்கு நேர் களத்தில் இறங்கியுள்ளார்.
இதுகுறித்து தங்கத்தமிழ் செல்வன் கூறுகையில், ''திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்துள்ளார். குறிப்பாக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு சம பலத்தில் உள்ளவர்களை நிறுத்தி கண்டிப்பாக வெற்றி பெற உழைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதனடிப்படையிலேயே எனக்கும் இந்தமுறை போடி தொகுதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட அமைச்சர்கள் மீதான ஊழல்பட்டியலே போதும். இவர்களை கண்டிப்பாக தொகுதி மக்கள் தோற்கடிப்பார்கள். அதேபோல் போடி தொகுதியிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவது உறுதி'' என்று கூறினார்.