Skip to main content

'இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன்'-விஜய்யின் மூன்றாவது கடிதம்

Published on 25/10/2024 | Edited on 25/10/2024
'I will wait with the door of my heart open' - Vijay's third letter

நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நடைபெற இருக்கும் மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இரண்டு முறை தொண்டர்களுக்கு கடிதம் வெளியிட்டுள்ளார். இரண்டாவது கடிதத்தில் பல்வேறு அறிவுரைகளையும் தொண்டர்களுக்கு வழங்கி இருந்தார்.

இந்நிலையில் கட்சி தொண்டர்களுக்கு நடிகர் விஜய் மூன்றாவது கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் 'நம் கழகத்தின் முதல் மாநாடான வெற்றிக் கொள்கை திருவிழாவிற்கு எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப்போகும் தருணம் நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள் நம்மிடையே இருக்கும் அன்பின் கணத்தை இன்னும் பல மடங்கு கூட்டப் போகின்றன.

அதை வார்த்தைகளில் எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கி போற்றும் விதமாக கொண்டாடுவோம். நம் வெற்றிக் கொள்கை திருவிழாவை கொண்டாடுவதற்காக பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும் பொழுது பாதுகாப்பையும் கட்டுப்பாடையும் மனதில் நிறுத்தி பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியை கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில் என் இரு கரங்களின் விரித்தபடி இதய வாசலைத் திறந்து வைத்து காத்திருப்பேன்.

வாருங்கள் மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளை செயல்படுத்தி உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்' எனது தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்