Skip to main content

“வீட்டுக்கு ஒருவரை பட்டப் படிப்பு படித்த மாணவர்களாக உருவாக்குவேன்” - அமைச்சர் ஐ. பெரியசாமி 

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

I. Periyasamy said that he will create a graduate student for every household

 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி சீவல்சரகு ஊராட்சிக்கு உட்பட்ட சுதனாகியபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி  ஏற்பாட்டின்படி கூட்டுறவுத்துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவரப்பட்டது. இக்கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டும் வரை மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கக்கூடாது என்பதற்காக அருகில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் கூட்டுறவுத்துறை கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. 2022ம் வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் முதலாமாண்டில் 253 மாணவர்களும், 2ம் ஆண்டில்(2023) தற்போது 296 மாணவர்களும் பயின்று வருகின்றனர். 

 

இக்கல்லூரியில் இளங்கலை பாடப் பிரிவுகளில் வரலாறு, கூட்டுறவு, பொருளியல், தமிழ், வணிகவியல், கணினியியல் (பி.காம்.சிஏ), வணிக மேலாண்மை படிப்பிற்கான வகுப்புகள் உள்ளன. கல்லூரியைத் தொடங்கி வைத்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மாணவர்களுக்கான கல்லூரி கட்டணத்தை செலுத்தி மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதனைத் தொடர்ந்து 2023 ஆம் வருடம் மாணவர் சேர்க்கையின் போதும் கல்விக் கட்டணம் செலுத்தியதோடு முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான பருவத்தேர்வு கட்டணத்தையும் மாணவர்கள் நலன் கருதி செலுத்தி வருகிறார். இதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 

 

இதுகுறித்து கல்லூரி துணை முதல்வர் பழனிக்குமார் கூறுகையில், “கல்லூரி தொடங்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை ஒவ்வொரு நாளும் கல்லூரியின் வளர்ச்சியில் அமைச்சர் ஐ. பெரியசாமி அக்கறையோடு செயல்படுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் அமையாத அளவிற்கு ரூ.98 கோடி மதிப்பில் கூட்டுறவுத்துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி நவீன வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது. கல்லூரியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன் கருதி வரும் கல்வியாண்டு முதல் இளங்கலை ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தகவல் தொழில்நுட்பக் கல்வி, கணிப்பொறி அறிவியலுக்கான பாடப் பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன” என்றார்.

 

இது சம்பந்தமாக  எஸ்.பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் சசி கூறுகையில், “ஆத்தூர் தொகுதியில் உள்ள மாணவர்களாகிய நாங்கள் அமைச்சர் ஐ. பெரியசாமியை எங்களின் கல்விக் கண்ணை திறந்த காவல் தெய்வமாகத்தான் பார்க்கிறோம். குறிப்பாக எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தியதோடு தற்போது கல்லூரியையும் கொண்டு வந்து எங்களை உயர்கல்வி கற்கும் அளவிற்கு உயர்த்தியுள்ளார். அதோடு மட்டுமின்றி கல்விக் கட்டணம் மற்றும் பருவத் தேர்விற்கான கட்டணங்களைக் கட்டி எங்களின் பெற்றோர்களின் சுமைகளை குறைத்துள்ளார். வாழ்நாள் உள்ளவரை அவரை மறக்க முடியாத அளவிற்கு எங்கள் தொகுதியில் பல மாணவர்களை உயர் கல்வி கற்கும் அளவிற்கு உயர்த்தியுள்ளார். மாணவர்கள் சமுதாயம் என்றும் அவருக்கு உறுதுணையாக இருக்கும்” என்றார். 

 

இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, “ஒரு குடும்பத்தில் ஒருவர் உயர்கல்வி கற்றாலே அந்த குடும்பத்தின் வாழ்வாதாரம் முன்னேறிவிடும் 1989 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 34 ஆண்டுகள் ஆத்தூர் தொகுதியில் மக்களோடு மக்களாக இருந்து வருகிறேன். கிராம ஊராட்சியில் உள்ள மக்களின் பொதுவான சிரமங்கள் எனக்கு தெரியும். வாழ்வாதாரத்தில் அடித்தட்டில் இருக்கும் அவர்களை உயர்த்த வேண்டும் என்றால் அந்த குடும்பத்திலிருந்து ஒருவராவது உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கோடு தமிழக முதல்வர் திராவிட மாடல் ஆட்சி நாயகன் மு.க. ஸ்டாலின் ஆதரவோடு ஆத்தூர் தொகுதியில் இரண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வந்தேன். இப்போது இப்பகுதியை சேர்ந்த பல மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி படிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்கள். 

 

மேலும் இப்பகுதியில் பூ விவசாயம் அதிகம், பூ பறிக்கும் தொழிலில் அதிகாலை நேரங்களில் பெண் மாணவியர்கள்தான் அதில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களும் சிரமமின்றி தங்கள் கிராமம் அருகே உள்ள கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுத்தப்பட்டதுதான் இந்த கூட்டுறவுத் துறை சார்பாக நடத்தப்படும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. முதலாம் ஆண்டிலேயே மாணவர்கள் எண்ணிக்கை என்னை மகிழ்ச்சி அடையச் செய்தது. தற்போது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கையின்போது சென்ற ஆண்டை விட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர். இதன்மூலம் ஆத்தூர் தொகுதியில் வீட்டுக்கு ஒருவராவது பட்டப்படிப்பு படித்த மாணவர்களை உருவாக்குவதுதான் எனது முதல் கடமை” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அறிவியல் ரீதியிலான சிறந்த பயிற்சி’ - விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Best Scientific Practice Sports Development Authority Notice

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால பயிற்சி முகாம் குறைந்த கட்டணத்தில் அறிவியல் ரீதியிலான சிறந்த பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு வருடமும் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டுகளில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அமைந்துள்ள நவீன விளையாட்டு அரங்கங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுநர்களைக் கொண்டு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி முகாமில் தகுதி பெற்ற பயிற்றுநர்களைக் கொண்டு விஞ்ஞான ரீதியலான பயிற்சி (காலை, மாலை இருவேளைகளிலும்), சிற்றுண்டி, குடிநீர், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் மற்றும் சீருடை (T-Shirt) வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் நவீன விளையாட்டரங்கங்களில் 2013 ஆம் ஆண்டு முதல் கோடைகால பயிற்சி முகாமிற்கான பயிற்சி கட்டணம் பெறப்பட்டு வந்துள்ளது. எடுத்துக்காட்டாக 2013 ஆம் ஆண்டு டென்னிஸ் ரூ.1,500/-ம் இறகுப்பந்து ரூ. 1,000/- ம் கிரிக்கெட் ரூ.500/-ம் போல ஒவ்வொரு விளையாட்டுக்கும் வெவ்வெறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில் தடகளம், வாள் விளையாட்டு, கைப்பந்து, கையுந்துப்பந்து விளையாட்டுகளுக்குத் தலா 500/- ரூபாயும் கிரிக்கெட், கால்பந்து, ஜிம்நாஸ்டிக்ஸ், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 1000/-மும் டென்னிஸ் ரூ. 1,500/-ம் இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 2000/- வரை பயிற்சிக் கட்டணமாக பெறப்பட்டு வந்தது. 

Best Scientific Practice Sports Development Authority Notice

ஆனால், மாணவ மாணவியரிடையே பெருகி வரும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தவும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த பயிற்றுநர்கள் காலி இடங்களில் பல்வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட 76 பயிற்றுநர்களின் சேவை மாணவ, மாணவியர்க்கு கிடைக்கும் வகையிலும் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு வசதிகளில் விளையாடும் வாய்ப்பை மாணவ மாணவியர்க்கு அளிக்கும் வகையிலும் இந்த ஆண்டு 29.04.2024 முதல் 13.05.2024 வரை நடைபெறவுள்ள கோடைகால பயிற்சி முகாமில், ஏற்கெனவே. வெவ்வேறு பயிற்சிக் கட்டணம் (அதாவது ரூ.200/-லிருந்து ரூ.2000/- வரை) நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை தற்போது முறைப்படுத்தி அனைவரும் பயன் பெறும் வகையில் சென்னையில் அனைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.500, பிற மாவட்டங்களில் ரூ.200 மட்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் அறிவியல் ரீதியிலான பயிற்சி, விளையாட்டு சீருடை, சிற்றுண்டி, சான்றிதழ்கள் போன்றவை மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும்.

2013-ஆம் வருடம் முதல் 2019ஆம் ஆண்டு வரை (2016 ஆம் வருடம் நீங்கலாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு) மாவட்ட தலைநகரங்களுக்குச் செலவினத் தொகையாகத் தலா ரூ. 8,000/- வரை வழங்கப்பட்டு வந்தது. 2020-2022 வரை கொரோனா காலத்தில் பயிற்சி முகாம் நடைபெறவில்லை. 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற்றது. இதற்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களுக்கும் சென்னையில் உள்ள நவீன விளையாட்டரங்களுக்கும் செலவினத் தொகையாக ரூ.15,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு அனைத்து விளையாட்டு வசதிகளுடன் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கு பயிற்சி முகாம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டும் இப்பயிற்சி முகாம் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் ரூ.15,000/- அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.