Skip to main content

பசியை போக்கும் மனித நேயம்..! புகைப்படத்திற்கு முகம் காட்ட மறுக்கும் மனிதர்..!

Published on 22/05/2021 | Edited on 22/05/2021


 

சாலையின் முகப்பில் அரசு மருத்துவமனை.! அதன் அருகிலேயே நடைபயிலும் தூரத்திலுள்ளது அந்த பழக்கடை. பூட்டப்பட்ட கடையின் வாசலில், நிறைவாய் ஐந்து வாழைத்தார்கள் அங்கே தொங்க விடப்பட்டிருக்க, அதனூடே "பசித்தால் எடுத்து சாப்பிடவும்.! பழம் இலவசம்.! வீணாக்க வேண்டாம்.!" என்ற வாசகங்கள் அடங்கிய சிலேட்டு பலகையும் வைக்கப்பட்டிருக்கின்றது. அரசு மருத்துவமனைக்கு வருபவர்களும், பாதசாரிகளும் அதனை கவணித்து நின்று பறித்து தின்று பசியாறி செல்கின்றனர்.

 

கரோனா பெருந்தொற்றால் வேலையிழந்து வாழ்வாதாரம் கேள்விக்குறியானாலும், அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக ஆங்காங்கே மனித நேய செயல்கள் நடைப்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. அந்த வகையில் பசியால் வாடும் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியாய் பழத்தை கொடுத்து பசியாற்றி வருகின்றார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி எனும் பழவியாபாரி. கடலையூர் சாலையில் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள அந்த பழக்கடை, அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வியாபாரத்தை முடித்துவிட்டு பூட்டிய கடையின் முன் தினசரி ஐந்து வாழைப்பழத் தார்களை கட்டி தொங்கவிடுகின்றார். அது பசியால் வருபவர்களை பசியாற்ற வைப்பதால் என்னற்ற மன திருப்தி அவருக்கு. "இந்த நேரத்தில் பசியாற்றுவது தான் முக்கியம்.! என்னால் முடிந்ததை செய்கின்றேன். இது பெரிய விஷயமல்ல.!" எனக் கூறிவிட்டு புகைப்படத்திற்கு கூட முகம் காட்ட மறுத்து நடையை கட்டுகின்றார் முத்துப்பாண்டி. செழிக்கட்டும் மனித நேயம்.!

 


படங்கள்: விவேக்

 

 

சார்ந்த செய்திகள்