Skip to main content

அசாம் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர், ரயில் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்துவரப்படுகிறார்...

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமன் என்ற இளைஞர் கடந்த வாரம் தனது நண்பருடன் அசாம் மாநிலம் சென்றார். அங்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் முத்துராமனும், அவரது நண்பரும் படுகாயமடைந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

 

hospitalized man shifted by rail ambulance from assam to puthukottai

 

 

சுயநினைவின்றி சிகிச்சை நடந்து வந்த நிலையில், தகவல் அறிந்து முத்துராமனின் சகோதரர் அங்கு சென்று தம்பியின் நிலையறிந்து மருத்துவர்களிடம் கேட்ட போது, எங்களிடம் உள்ள வசதிகளை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவனைக்கு கொண்டு சென்றால் கூடுதல் சிகிச்சை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

இதனால் டெல்லி கொண்டு செல்ல முடியாமல் தவித்த சகோதரர் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிவகங்கை தொகுதி எம் பி கார்த்தி ப சிதம்பரம், திருச்சி எம்பி திருநாவுக்கரசர் ஆகியோரிடம் உதவிகள் கேட்டிருந்தார்.

6 நாட்களுக்கு மேலும் முன்னேற்றம் இல்லாததால் தனி ஒருவனாக அசாமில் எதையும் செய்ய முடியாமல் தவித்த சகோதரர் தனது தம்பியின் உயிரை காக்க தனியார் முகவர்கள் மூலம் ரூ 1.20 லட்சம் செலுத்தி ஞாயிற்றுக் கிழமை காலை 5.30 மணிக்கு ரயில் ஆம்புலன்ஸ் மூலம் தனது தம்பி முத்துராமனை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். செவ்வாய்கிழமை அதிகாலை ரயில் சென்னை வந்தடைய உள்ளது. அதன் பிறகு தமிழக அரசு மருத்துவமனையான ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட உள்ளார்.

இது குறித்து முத்துராமனின் உறவினர்கள், " அசாமில் தனி நபராக எதுவும் செய்ய முடியாமல் தவித்து சென்னை கொண்டு வருகிறார். சென்னை கொண்டு வந்த உடன் அவசர சிகிச்சை அளித்து முத்துராமன் உயிரை காப்பாற்ற தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்" என்றனர் கண்ணீருடன்.

முத்துராமனுக்கு சிகிச்சை அளிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை தயாராக இருப்பதாக அமைச்சர் தரப்பில் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்