
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், “தனக்குச் சாதி மதம் இல்லை என்ற சான்றிதழ் வழங்கத் திருப்பத்தூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும். தனது குழந்தைகளுக்குச் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசு எந்த சலுகையும் கேட்கப் போவதில்லை” எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் அரசு சார்பில், “சாதி மதம் இல்லை என்ற சான்றிதழ் வழங்க வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் அளித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவி ல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் மேல்முறையீட்டு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (11.06.2025) முன்பு விசாரணை வந்தது. அப்போது நீதிபதிகள், “ஏற்கனவே திருப்பத்தூர், கோவை, அம்பத்தூர் வட்டாட்சியர்கள் சாதி, மதம் இல்லை எனச் சான்றிதழ்கள் வழங்கி இருக்கின்றனர். அதேபோல் மனுதாருக்கு ஒரு மாதத்துக்குள் உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும்.
சாதி ரீதியிலான பாரபட்சத்தைத் தடுக்க வேண்டும் எனப் போராடி வரும் நிலையில் சாதி, மதம் இல்லை எனச் சான்றிதழ் கோரும் மனுதாரருக்குப் பாராட்டுகள். அதே சமயம் சாதி, மதம் இல்லை எனச் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்குத் தமிழக அரசுக்குச் சார்பில் முறையான அறிவுறுதல் வழங்கி உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்படுகிறது. அரசியலமைப்பு சாசனம் சாதிய ரீதியிலான பாகுபாடுகளைத் தடை செய்துள்ள போதும் சமூக வாழ்க்கையில் அரசியல், கல்வியில் வேலைவாய்ப்பில் சாதி, மதமும் இன்னும் முக்கியத்துவம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது” என நாட்டில் நிலவும் சாதி, மத பாகுபாடுகளைச் சுட்டிக்காட்டி நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.