Skip to main content

அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்க உத்தரவிடக்கோரி வழக்கு! 

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

high court chennai



தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் வழிபாடு நடத்தும் வகையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.கே.ஜலீல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் -

மார்ச் 23-ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கு, மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட மே 17-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  மே 4-ஆம் தேதி முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்து, அதன்படி சிறுகுறு தொழில் நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள், பழுது பார்க்கும் சேவைகள் உள்ளிட்ட பணிகள்,  சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி கிடைத்துள்ளன.   ஆனால்,  பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத்தலங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 

 

 


மனிதனின் வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவையில்லாத மதுபானக் கடைகளை திறக்க அனுமதித்த அரசு, மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்கக்கூடிய, சாதகமான எண்ண ஓட்டத்தை உருவாக்கக்கூடிய வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்கவில்லை.  ஊரடங்கு உத்தரவால் நிதி நிலைமை பாதிக்கப்படுகிறது என்று சில நிறுவனங்களை இயக்க அனுமதித்த தமிழக அரசு,  மனதளவில் பாதிக்கப்பட்டு நிம்மதி இழந்துள்ள தன்னைப் போன்றவர்களுக்கு மத வழிபாட்டுத் தலங்கள் ஒரு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும். 

 


இஸ்லாமியரின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு காலத்தில் பள்ளிவாசலுக்குச் சென்று வர முடியவில்லை.  முன்னோர்கள் பின்பற்றிய வழிபாட்டு முறைகளை அந்த இடங்களுக்குச் சென்று நிறைவேற்ற முடியாத மன அழுத்தத்தில் பலரும் உள்ளனர்.  தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபடுவதற்கு அனுமதி அளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 

இந்த வழக்கு மே 11-ஆம் தேதி நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வருகிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்