Skip to main content

மணமான பெண் இறந்தால் தாய் சட்டபூர்வ வாரிசாக முடியாது! - சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்!

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த பி.வி.ஆர்.கிருஷ்ணா என்பவருக்கு விஜயநாகலட்சுமி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், 2013-ம் ஆண்டு விஜயநாகலட்சுமி இறந்துவிட்டார். அவரது சட்டபூர்வ வாரிசு சான்றிதழில், விஜயநாகலட்சுமியின் தாயார் சேகரியின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. மாமியார் பெயர் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மாவட்ட ஆட்சியருக்கும், அமைந்தகரை வட்டாட்சியருக்கும் கிருஷ்ணா மனு அனுப்பினார். அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தனது மனுவை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி, கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

high court about Successor Certificate

 

 

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.ஸ்ரீதர், அரசு தரப்பில் அரசு கூடுதல் பிளீடர் ஆர்.கோவிந்தசாமி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது நீதிபதி, இந்து வாரிசுரிமை சட்டப்படி ஒரு ஆண் இறந்துவிட்டால், மனைவி, குழந்தை மட்டுமல்லாமல், அவரது தாயாரும் சட்டபூர்வ வாரிசுகளாகக் கருதப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இந்து வாரிசுரிமை சட்டப்படி மணமான ஒரு ஆண் இறக்கும்போது மட்டுமே இது பொருந்தும் எனவும், ஒரு பெண் இறந்துவிட்டால் அவரது கணவரும், குழந்தையும் மட்டுமே சட்டபூர்வ வாரிசுகள் ஆகமுடியும் எனவும், இறந்த பெண்ணின் தாய் தந்தையை சட்டபூர்வ வாரிசாகக் கருதமுடியாது எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், விஜயநாகலட்சுமியின் வாரிசு சான்றிதழை ரத்து செய்ததுடன், அவரது கணவர் கிருஷ்ணா மற்றும் குழந்தை பெயர்கள் மட்டுமே கொண்ட புதிய வாரிசு சான்றிதழை பிப்ரவரி 15-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்