
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், திருச்சி மாவட்டத்தை அடுத்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் அங்கு இருந்து வரக்கூடிய மழை நீரானது திருச்சி மாவட்ட சுற்றுலாத் தலமாக விளங்கும் புளியஞ்சோலை பகுதியில் ஆர்ப்பரித்து கொட்ட ஆரம்பித்துள்ளது.
தற்போது அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், புளியஞ்சோலை சுற்றுலா பகுதியில் பயணிகள் செல்வதற்கு தற்காலிகமாக பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை நியமித்துள்ளது. கனமழையால் புளியஞ்சோலை வனப்பகுதி சுற்றி உள்ள கிராமங்களுக்கு போதுமான நீர்வரத்து அதிகரித்து இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் இவற்றின் ஆபத்தை அறியாமல் வெள்ளப்பெருக்கில் குளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே வனத்துறை மும்முரமாக செயல்பட்டு பல்வேறு எச்சரிக்கை பதாகைகளை வைத்து வருகின்றனர்.