Skip to main content

கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்! சுருக்குமடி வலையை அனுமதிக்கக் கோரிக்கை!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

Fishermen conducting series of protests in cuddalore demanding permission for the banned fishing net - surukkumadi

 

சுருக்குமடி வலை கொண்டு மீன்பிடிக்க அனுமதிக்கக்கோரி, நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடற்கரையில் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கடலூர் மாவட்டத்தில், ஜூன் 01-ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம் தமிழ்நாடு கடல் - மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் மற்றும் அரசு ஆணையின்படி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால், அதனைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. மேலும் அதனை மீறி சுருக்குமடி வலைகள் மற்றும் அதிவேக திறன் கொண்ட இயந்திரங்களை பயன்படுத்தினால், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி, படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்ததுடன் இதனை மீறுவோருக்கு மீன்வளத்துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தது. 

 

இதனிடையே கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மீனவர்கள் சிலர் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு தரப்பு மீனவர்களிடையே  மோதல் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

 

கடலூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் சுருக்குமடி வலைகளுடன் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித்து திரும்பின. கடலூர் துறைமுக பகுதியில் விற்பனைக்காக மீன்கள் இறக்கப்பட்டபோது அங்கு வந்த மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராமலட்சுமி, "சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை விற்கவோ, வாங்கவோ கூடாது. மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்' என எச்சரித்தார். அதையடுத்து சுருக்குமடி மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை புதுச்சேரி பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்றனர்.

 

இதுபற்றி தகவலறிந்த மீன்வளத்துறை மற்றும் காவல்துறையினர், கடலூர் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் வாகன தணிக்கை நடத்தி, மீன்கள் ஏற்றி வந்த லாரிகளை பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கையை எதிர்த்து ஏராளமான மீன் வியாபாரிகள் மீன்வளத்துறை அலுவலத்தில் திரண்டனர். ஒவ்வொரு வாகனத்திலும் இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய மீன்கள் இருப்பதாகவும், அதை விடுவிக்காவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்தும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு வரவில்லை. 

 

Fishermen conducting series of protests in cuddalore demanding permission for the banned fishing net - surukkumadi

 

இதனால் 'சுருக்கு மடி வலைகளை அனுமதிக்கும் வரை கடலூர் மாவட்டத்தில் அனைத்து வகையான படகுகளிலிருந்து மீன்கள் வாங்குவதை நிறுத்த போகிறோம், அனைத்து ஐஸ் கம்பெனிகளும் மூடப்படும்' என்று அறிவித்தனர்.

 

‘சுருக்கு மடி வலைக்கான தடையை நீக்கக்கோரியும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்கக்கோரியும்’ அனைத்து சுருக்குமடிவலை மீனவர்கள், மீன்வளத்துறை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

இதனிடையே டன் கணக்கில் மீன்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை கண்டித்து மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடலூர் துறைமுகம் மற்றும் கடற்கரையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

 

அதேவேளையில் பறிமுதல் செய்யப்பட்ட பெரிய வாகனங்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும், சிறிய வாகனங்களுக்கு ரூபாய் 30 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு 20 வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. 

 

இதையடுத்து சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி கடலில் இறங்கி போராடப்போவதாக கூறி மீனவர்கள் இன்று கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் குடும்பத்தினருடன் கூடினர்.

 

Fishermen conducting series of protests in cuddalore demanding permission for the banned fishing net - surukkumadi

 

அதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் போராட்டக்காரர்களிடம் கடலில் இறங்க அனுமதியில்லை எனக் கூறியதால் கடற்கரையில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அதன்பின்னர் சார் ஆட்சியர் ஜெகதீஸ்வரன், மீன்வளத்துறை, காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம், ‘அரசுக்கு தகவல் தெரிவித்து கோரிக்கையைப் பரிசீலிப்பதாக’ சமரசம் செய்ததையடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் குவிந்ததால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.