Skip to main content

படகு கவிழ்ந்து மீனவர் பலி; இருவர் மருத்துவமனையில் அனுமதி

Published on 31/12/2023 | Edited on 01/01/2024
Fisherman incident after boat capsizes Two were hospitalized

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை புதுகுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஜெயசீலன் (வயது 42), அமுது (வயது 48), சக்திவேல் (வயது 50) ஆகிய 3 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பரங்கிப்பேட்டை கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்துள்ளது. இதில் அமுது, சக்திவேல் ஆகிய இருவரும் கடலில் நீந்தி காயங்களுடன் கரைக்கு வந்துள்ளனர். இதில் ஜெயசீலன் மாயமாகியுள்ளார். மேலும் கரைக்கு வந்தவர்களை மீட்டு சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் படகு கவிழ்ந்து காணாமல் போன ஜெயசீலன் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீனவர்கள் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் உதவியுடன் தேடும் பணியில் கடந்த 2  நாட்களாக ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று (31.102023) சின்ன வாய்க்கால் கடற்கரை ஓரமாக இவரது உடல் கரை ஒதுங்கி உள்ளது. இதனை மீட்டு பரங்கிப்பேட்டை காவல் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த மீனவர் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, சிபிஎம் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் சந்தானராஜ், நிர்வாகி பழனி, சுந்தர், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஆகாஷ் உள்ளிட்டவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் குறித்து எஸ்.ஜி ரமேஷ்பாபு தெரிவிக்கையில், “உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கும், காயத்துடன் உயிர் தப்பியவர்களுக்கும், படகு சேதமடைந்ததற்கு நிவராணம் வழங்க வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.