Skip to main content

பேருந்தில் இருந்து இறங்கி திருடனை பிடித்த பெண் காவலர்... பாராட்டிய சென்னை கமிஷனர்! 

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

The female police officer who got off the bus and stole the thief .. Chennai Commissioner praised!

 

சென்னை, பாரீஸ் பூக்கடை பகுதியில் முதியவரிடம் செல்ஃபோன் பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற குற்றவாளியை, துரத்திச்சென்று பிடித்த ஆயுதப்படை பெண் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

 

சென்னை, பார்க்டவுனைச் சேர்ந்த முதியவர் தாமோதரன் என்பவர் கடந்த 5ஆம் தேதி இரவு, சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த செல்ஃபோன் திருடன், முதியவர் தாமோதரனிடம் இருந்த செல்ஃபோனைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளான். தன் செல்ஃபோனைப் பறிகொடுத்த முதியவர் கத்திக் கூச்சலிட்டார். 

 

அச்சமயம், அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த பேருந்தில் பயணித்த ஆயுதப்படை பெண் காவலர் இந்திராணி இதனைக் கவனித்து, உடனடியாக பேருந்திலிருந்து இறங்கி செல்ஃபோன் திருடனைத் துரத்திச் சென்று பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப்பிடித்தார். பிறகு அவரை C1 பூக்கடை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார்.

 

C-1 பூக்கடை காவல் நிலையத்தில் பிடிப்பட்ட நபர் மீது குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், பிடிபட்ட நபர் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 1 செல்ஃபோன் கைப்பற்றப்பட்டது. மேலும், அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

மேற்படி சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்த ஆயுதப்படை பெண் காவலரை, சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்துப் பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்