Skip to main content

காஞ்சிபுரம் மானாமதியில் மேலும் ஒரு வெடிக்கும் பொருள் கண்டுபிடிப்பு!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

காஞ்சிபுரத்தில் மர்மப்பொருள் வெடித்து விபத்தான சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் வெடிக்கக்கூடிய பொருட்களாக அங்கு மேலும் இருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அங்கு போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் துப்பறிந்த நிலையில், மற்றொரு வெடிக்கும்  பொருளும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 

An Explosive material Discovery at Kanchipuram

 

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில் கங்கை அம்மன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவில் குளத்தை தூர்வாரும் பணி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதனை தூர்வாரும் பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் தூர் வாரும் பணி நடந்து கொண்டிருக்கும் அந்த பகுதியில் பிறந்தநாள் கொண்டாட சென்றுள்ளனர். அப்போது குப்பைகள் அனைத்தும் முழுமையாக தூர்வாரபட்டிருந்ததால் அந்தப் பகுதியில் ஒரு மரப்பெட்டி ஒன்று இளைஞர் கண்ணில்பட்டது. 

 

An Explosive material Discovery at Kanchipuram

 

அந்த மர பெட்டியை எடுத்து கோவிலின் கரை பகுதியில் அமர்ந்து பெட்டியை திறக்க முயற்சி மேற்கொண்டனர். அப்போது பயங்கர சத்தத்துடன் அந்த பெட்டி வெடித்து சிதறியது. அதிலிருந்த பால்ரஸ்கள், சில இரும்பு துகள்கள் போன்றவை அருகிலிருந்த கோயில் சுவற்றின் மீதுபட்டு கோவில் சுவர்களில் காயங்கள் ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 6 நபர்களில் சூர்யா என்கின்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே குடல் சரிந்து மயக்கமுற்று கீழே விழுந்தார். ஊர்மக்கள் சத்தம்கேட்டு அலறியடித்து காயம்பட்ட அனைவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். 

சிகிச்சை பலனளிக்காமல் சூர்யா என்கின்ற இளைஞர் பரிதாபமாக  நேற்றே உயிரிழந்த நிலையில், இன்று திலீபன் என்ற மற்றொரு இளைஞர் உயிரிழந்தார். வெடித்த பொருள் என்னவென்று ஆராய வெடிகுண்டு நிபுணர்களும் வர வைக்கப்பட்டு சோதனை செய்ததில் அது ராக்கெட் லாஞ்சர் என தெரியவந்துள்ளதாக கூறப்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய திருமால், யுவராஜ் ஆகியோர் மேலும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். ஜெயராமன், விஸ்வநாதன் ஆகியோர் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

An Explosive material Discovery at Kanchipuram

 

இந்நிலையில் கோவில் குளம் அருகே நேற்று வெடித்ததை போன்ற மேலும் மர்ம பொருட்கள் உள்ளதாக சந்தேகம் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் அங்கு மோப்ப நாயுடன் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த தேடுதலில் மற்றொரு வெடிக்கும் மர்ம பொருள் சிக்கியது. அந்த பொருள் 2009 ஆண்டு தயாரிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் என்றும் நேற்று வெடித்தது 2007 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

இது ராணுவத்தை சேர்ந்தது அல்ல எனவும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த பகுதியில் இரும்பு வியாபாரி ஒருவர் இரும்பு பொருட்களை அந்த பகுதியில் கொட்டி வைத்திருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் மூலமாக இந்த பொருட்கள் இங்கே வந்ததா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்