Skip to main content

'சொத்துக்கள் முடக்கம்'-இடைக்கால தடை பெற்ற இயக்குநர் ஷங்கர்

Published on 11/03/2025 | Edited on 11/03/2025
'The Enforcement Directorate froze assets' - Director Shankar gets interim ban

இயக்குநர் ஷங்கர் தனது கதையைத் திருடி ‘எந்திரன்’ திரைப்படத்தை எடுத்ததாக, அவர் மீது நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்திருந்தார். பதிப்புரிமை சட்டம் மற்றும் மோசடி குற்றச்சாட்டின் கீழ் இயக்குநர் ஷங்கருக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆரூர் தமிழ்நாடன் தனிநபர் புகார் கொடுத்திருந்ததோடு, இது தொடர்பான உரிமையியல் வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.

உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற உரிமையியல் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. அதில் ஷங்கருக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதேநேரம் எழும்பூர் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் தொடர்பான வழக்கின் விசாரணையை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கையுடன் ஷங்கர் தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது.

கடந்த பிப்.17 ஆம் தேதி இந்த வழக்கில் அமலாக்கத்துறை இயக்குநர் ஷங்கர் எந்திரன் படத்தில் ஊதியமாக பெற்ற 10.11 கோடி ரூபாய்க்கான சொத்துக்களை தற்காலிகமாக முடக்கம் செய்து இருந்தனர். இந்த உத்தரவை எதிர்த்து இயக்குநர் ஷங்கர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், எம்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

'ஏற்கனவே இது தொடர்பான உரிமையியல் வழக்கு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கம் செய்யப்பட்டது தவறு' என இயக்குநர் ஷங்கர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தனிநபர் புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது' என தெரிவித்தார். அமலாக்கத்துறையின் விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'சொத்துக்களை முடக்கம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது' என தெரிவித்து, சொத்து முடக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இயக்குநர் ஷங்கரின் மனுவிற்கு ஏப்ரல் 21ம் தேதிக்குள் பதிலளிக்கும் வகையில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்