Skip to main content

“வீட்டு இணைப்புக்கு எக்காரணத்தைக் கொண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படாது” - முதல்வர் திட்டவட்டம்

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

Electricity charges will not be increased on the basis of home connection says cm stalin

 

தமிழகத்தில் வீட்டு இணைப்பிற்கு எக்காரணத்தைக் கொண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 

தமிழகத்தில் வீட்டு இணைப்பிற்கான மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், எக்காரணத்தைக் கொண்டும் வீட்டு இணைப்புக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாது எனத் தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாகப் பேசிய அவர், “வீட்டு இணைப்பிற்கு எக்காரணத்தைக் கொண்டும் மின் கட்டணத்தை உயர்த்தமாட்டோம். திட்டமிட்டு தவறான தகவல் பரப்பப்படுகிறது. அனைத்து மின்சார சலுகைகளும் தொடரும். வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். கைத்தறி, நெசவு தறி விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரமும் தொடரும். மத்திய அரசின் புதிய சட்டப்படி 4.7 சதவீதம் மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். ஆனால் அதனை 2.18 சதவீதமாகக் குறைத்து அந்த தொகையையும் மானியமாகத் தமிழக அரசே ஏற்றுக்கொண்டு மின் வாரியத்திற்குத் தருவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

ஆகவே வீட்டு இணைப்பைப் பொறுத்தவரைக்கும் எந்த வித கட்டண உயர்வும் இருக்காது. வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் கட்டண உயர்வு இருக்கும். அதுவும் 13 பைசாவிலிருந்து 23 பைசா வரைதான் உயர்வு இருக்கும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. கடந்த ஆட்சியில் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. உதய் திட்டத்தில் அதிமுக ஆட்சி கையெழுத்திட்டது. அதனால்தான் இவ்வளவு பிரச்சனையும் நடந்துகொண்டிருக்கிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார்’ - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Minister tRb raja says cM MKStalin is going to America 

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலுரை வழங்கினார். அப்போது பேசுகையில், “ஆண்டுக்கு 10 லட்சம் என்ற அடிப்படையில், 31 லட்சம் வேலைவாய்ப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். விரைவில் 50வது சிப்காட் பூங்காவை முதலமைச்சர் தொடங்கி வைப்பார். தஞ்சையில் பாமாயில் உற்பத்தி தொழிற்சாலை விரைவில் தொடங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்படும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் 60% உறுதி செய்யப்பட்டுள்ளன. அதாவது 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், 379 ஒப்பந்தங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன.  கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த 2 முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறினாலும், அவற்றில் சொற்பமானவை மட்டுமே பணிகளாக மாறின. 

Minister tRb raja says cM MKStalin is going to America 

மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தாண்டு  ரூ. 2100 கோடி கடன் வழங்கப்படும். திருவண்ணாமலை மற்றும் கரூர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். மேலும் தனியார் பங்களிப்புடன் கூட்டு முயற்சியில் தொழிற்பூங்காக்களை சிப்காட் உருவாக்கும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய விமான நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெளியே இருக்கும் சிலர், இதில் கேள்விகளை எழுப்பியுள்ளனர். தீவிர ஆய்வுக்கு பிறகே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கண்டிப்பாக விமான நிலையம் அமையும். கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வெகுவிரைவில் தொடங்கும். சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு நிலம் எடுப்பு தொடங்கிவிட்டது. மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்” எனத் தெரிவித்தார். 

Next Story

“நீட் தேர்வு ஒழியும் வரை அதிமுகவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்” - இ.பி.எஸ்.!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
The voice of ADMK will keep ringing till the end of NEET 

தமிழக சட்டப் பேரவையில், நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.06.2024) உரையாற்றினார். மேலும், “இந்தத் தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு பேசினர். அதனைத் தொடந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், பிறப்பித்துள்ள உத்தரவுகள், நீட் தேர்வு குறித்த முறைகேடுகள் தொடர் அம்பலம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பது, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கம், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு எனத் தொடர்ச்சியான நிகழ்வுகள் சொல்கின்ற செய்தி ஒன்று தான்- நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று!. 

The voice of ADMK will keep ringing till the end of NEET 

38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3 வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்?. இத்தீர்மானம் திமுக அரசின் மற்றுமொரு அரசியல் நாடகம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை மடைமாற்ற நினைக்கும் இதுபோன்ற பயனற்ற அரசியல் வித்தைகளை மக்கள் இனியும் நம்புவதாக இல்லை. நீட் தேர்வை பாராளுமன்றம் மூலம் மறுபரிசீலனை செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை வருகின்ற பாராளுமன்றக் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய பாஜக கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியால் கடந்த 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் என அனைத்துத் தளங்களிலும் தொடர்ச்சியான முன்னெடுப்புகளை மேற்கொண்ட ஒரே இயக்கம் என்ற அடிப்படையில், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வு ஒழியும் வரை அதிமுகவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.