Skip to main content

புகார் சொன்ன அண்ணாமலைக்கு பாடம் எடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

 Election Commission of India AND BJP STATE LEADER ANNAMALAI TWEETS

 

பிப்ரவரி 19- ஆம் தேதி அன்று தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த காவல்துறையினரின் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஆயுதம் ஏந்திய காவல்துறையின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை (22/02/2022) காலை 08.00 மணிக்குத் தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செய்து வருகிறது.

 

இந்த நிலையில், தேர்தல் நாளன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வாக்குச்சாவடிக்கு அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாகக் கூறி, இது தொடர்பான காணொளியையும் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன், ”தேர்தல் நாளன்று எதுவும் நடக்கவில்லை என்று தி.மு.க. அரசு கூறுகிறது. இந்தக் காணொளி மூலம்,  தமிழகத்திலே எந்த அளவுக்கு ஆளும் கட்சி தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை நசுக்கி இருக்கிறார்கள் என்பது தெரியும்! வாக்கு எண்ணும் தினத்திலாவது தேர்தல் ஆணையம் தன் கண்களை மூடிக் கொள்ளாமல் இருப்பார்களா?" என்று குறிப்பிட்டு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ட்விட்டர் ஐடியை மென்ஷன் செய்திருந்தார்.

 

அண்ணாமலைக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், "கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களை நடத்துவது நாங்கள் இல்லை. அதற்கான அதிகாரமும் இல்லை. இவை இந்திய அரசியலமைப்பின் பிரிவு 243K மற்றும் 243ZA- ன் கீழ் தனி அதிகாரிகளால் அதாவது மாநில தேர்தல் ஆணையங்களால் நடத்தப்படுகின்றன. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை சம்மந்தப்பட்ட மாநில தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது. 

 

 

அண்ணாமலையின் கேள்விக்கு தேசிய தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள இந்த பதிலை ஆளும் கூட்டணியை சேர்ந்த தொண்டர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.