
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி, உச்சிமேடு அடுத்த வெளாங்காட்டு வலசு பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம்மாள். விவசாயிகளான இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவரது மகன் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தோட்டத்தில் தனியாக வசித்து வரும் கணவன், மனைவி இருவரும் கடந்த இரண்டு நாட்களாக மகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த (01.05.2025) அன்று இரவு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது கணவன் ராமசாமி வீட்டிற்கு உள்ளேயும், மனைவி பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியேயும் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட எஸ்பி. சுஜாதா சிவகிரி எஸ்.எஸ்.ஐ. அர்ஜுனன், பெருந்துறை டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன், மனைவி என இருவரும் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிவகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாகவே திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இதேபோல் வயது முதிர்ந்த தம்பதி கொலை செய்யப்பட்டிருந்தனர். பல்லடம் அருகில் உள்ள சேமலை கவுண்டம்பாளையத்தில் பண்ணை வீட்டில் வசித்து வந்த தெய்வசிகாமணி (வயது 76) என்பவரும், அவரது மனைவி அமலாத்தாள் (வயது 70) மற்றும் மகன் செந்தில்குமார் (வயது 46) ஆகியோர் கடந்த வருடம் 29/11/2024 அன்று அதிகாலை மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர்.
வீட்டுக்கு வந்த சவரத் தொழிலாளி மூன்று பேரும் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தும் முடிவு கிடைக்காததால் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 100 நாட்களை கடந்து தற்போது வரை விடையில்லாமல் விசாரணை நீண்டு வருகிறது.
இப்படியாக கொங்கு பகுதியில் தனியாக வசித்து வரும் முதியவர்கள் நோட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் தனி வீடுகளில் தனியாக வசிக்கும் வயது முதிர்ந்த தம்பதிகள் குறித்த தகவல்களை கணக்கெடுக்கும் பணியை தனிப்படை போலீசார் தொடங்கியிருக்கின்றனர்.
தோட்டத்து வீடுகளில் தனியாக வசிப்பவர்கள் அதுவும் குறிப்பாக வயது முதிர்ந்த தம்பதிகள் குறித்தும், அந்த பகுதியில் வெளி நபர்கள் நடமாட்டம்; வெளி மாநில; வடமாநில நபர்கள் தங்கி இருந்தால் அது குறித்த தகவல்களையும் சேகரித்து வருகின்றனர். ஈரோடு வயது முதிர்ந்த தம்பதி கொலை சம்பவத்தில் ஏற்கனவே எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மொத்தம் பத்து தனிப்படைகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.