Skip to main content

‘ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட்டை அனுமதிக்க வேண்டாம்!’ - தூத்துக்குடியில் கருத்துக் கேட்பு கூட்டத்தில் தீர்மானம்!

Published on 23/04/2021 | Edited on 23/04/2021

 

sterlite palnt incident thoothukudi district collector

 

ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டாம் என கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசே ஏற்று நடத்தலாமா? என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டபோது, கூட்டம் கடுமையாக எதிர்த்தது.

 

ஆக்ஸிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாமா என்பது குறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று (23/04/2021) நடைபெற்றது.

 

நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால், ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று (22.04.2021) தெரிவித்தது.

 

நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கும் சோகமும் நடந்து வருகிறது. இதனையடுத்து, ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரயில்கள் மூலம் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட லாரிகளில் தேவையுள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இருப்பினும், மருத்துவமனைகளில் திரவ ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு, மே மாதம் மக்களின் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில், ஆக்ஸிஜன் தயாரித்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க அனுமதி தருமாறு ஸ்டெர்லைட் ஆலை உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்தது. வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ‛நாள் ஒன்றுக்கு 1,050 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறனுடைய உற்பத்திக் கூடத்தில் தற்போதைய நிலையில், நாள் ஒன்றுக்கு 500 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து அனுப்ப தயாராக இருக்கிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தது.

 

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துசார் மேத்தா, ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என வாதிட்டார். அவரது பதில் மனுவில், “ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம். நாட்டில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தரலாம்' எனக் குறிப்பிட்டார். 

 

இதைத்தொடர்ந்து, ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய மட்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆக்ஸிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாமா என்பது குறித்து, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் தற்போது நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என ஒரு தரப்பினர் குரல் எழுப்ப, எதிர் தரப்பினருக்கும் அவர்களுக்கும் ஆட்சியர் முன்னிலையில் கைகலப்பானது. இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்க வேண்டாம் என கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “அரசே ஏற்று நடத்தலாமா?” என ஆட்சியர் கேட்டதற்கும் அக்கூட்டத்தில் கடும் எதிர்ப்பு வெளிப்பட, கூட்டத்தை முடித்துவிட்டு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கிளம்பினார். 

 

இந்தக் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மருத்துவம் பார்ப்பது போல் வந்து தம்பதியைக் கழுத்தறுத்து படுகொலை; அதிரவைத்த கொடூரச் சம்பவம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Shocking incident on strangled the couple in chennai

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர். இவர், தனது வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவர்களது மகன், இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவர்களது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல், இன்று சிவன் நாயர் தனது வீட்டில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார். அப்போது, சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா? என்றும், குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்தப்பட்டு இருக்குமா? என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்தப் பகுதியில், எங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசாருக்கு சவாலாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆவடியில் கணவன் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.