Skip to main content

"நாட்டாம தீர்ப்ப மாத்திச் சொல்லு..." - பிரபல இயக்குனர் திடீர் மரணம்!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

Director erode soundar passes away

 

தமிழ் சினிமாவில் கொங்கு தமிழுக்குப் பெருமை சேர்த்த கலைஞர்களில் முதன்மையான இயக்குனர் அவர். 'சிம்மராசி', 'முதல் சீதனம்' திரைப்படங்களை இயக்கியவரும் பிரபல சினிமா கதை வசனகர்த்தாவுமான ஈரோடு சவுந்தர் உடல் நலக் குறைவால் காலமானார்.


ஈரோடு அருகே உள்ள முள்ளாம்பரப்பு நாதகவுண்டன் பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இயக்குனர் சவுந்தர். தமிழ்த் திரையுலகில் பெரும் வெற்றிபெற்ற, 'சேரன் பாண்டியன்', 'நாட்டாமை', 'பரம்பரை', 'சமுத்திரம்' உள்ளிட்டவை திரைப்படங்களின் வசனங்களை எழுதி, பிரபல வசனகர்த்தாவாக திகழ்ந்தவர். 'சிம்ம ராசி' என்ற திரைப்படத்தை சரத்குமாரை வைத்து இயக்கி டைரக்டராகவும் அவர் திறமையை வெளிப்படுத்தினார். அவரது வசனங்களில் வெளிவந்த, 'சேரன் பாண்டியன்', 'நாட்டாமை', 'சிம்ம ராசி' படங்களுக்காக தமிழக அரசின் விருதுகளையும் பெற்று சாதனை படைத்தவர்.


இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சரத்குமார் கூட்டணியில் உருவான 'நாட்டாமை' உள்ளிட்ட படங்கள் மூலம், கொங்கு தமிழைத் தமிழகம் முழுவதும் கொண்டுசென்ற பெருமைக்குரியவர் ஈரோடு சவுந்தர். இவர், 'முதல் சீதனம்' என்ற திரைப்படத்தையும் இயக்கி வெளியிட்டார். சென்ற சில ஆண்டுகளாக அவர் ஈரோட்டில், சொந்த ஊரான நாதகவுண்டன் பாளையத்ததில் வசித்துவந்தார். அவருக்கு, 7 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டது. ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார்.


ஒரு ஆண்டுக்கு முன்பு, அவருடைய பேரன் கபிலேஷ் என்பவரை கதாநாயகனாக நடிக்க வைத்து, 'அய்யா உள்ளேன் அய்யா' என்ற திரைப்படத்தையும் இயக்கினார். இந்த நிலையில், உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட அவர், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டும் பயன் இல்லாமல், 5-ஆம் தேதி மதியம் இறந்துவிட்டார். அவருக்கு, வயது 63. வளர்மதி என்ற மனைவியும், கலையரசி, காயத்திரி என்ற மகள்களும் உள்ளார்கள். இருமகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது.


இறந்த இயக்குனர் ஈரோடு சவுந்தரின் இறுதிச் சடங்குகள் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த கிராமமான நாதகவுண்டம் பாளையத்தில் நடைபெற உள்ளது என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.