Skip to main content

தனியாக இருந்த மருத்துவர்; கொள்ளையர்கள் துணிகரம்

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

dindigul palani gh chief doctor udhayakumar incident

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 55). இவர் பழனி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஸ்ரீநிதி மதுரையில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். தனது மகளைப் பார்த்து விட்டு வருவதற்காக உதயகுமார் மனைவி ரேவதி கடந்த 2 நாட்களுக்கு மதுரை சென்றுள்ளார்.

 

இந்நிலையில் உதயகுமார் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். நேற்று அதிகாலை 2 மணியளவில் தனது மருத்துவப் பணியை  முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த உதயகுமார், வீட்டைப் பூட்டி விட்டுத் தூங்கியுள்ளார். இவர் தூங்கிய சிறிது நேரத்தில் முகமூடி அணிந்த 3 நபர்கள் உதயகுமாரின் வீட்டில் நுழைந்து உதயகுமாரை எழுப்பி கத்தி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியதுடன் அங்கிருந்த சேரில் அவரைக் கட்டிப் போட்டுள்ளனர்.

 

அதன்பிறகு அந்த கும்பல் பீரோக்களில் இருந்த 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு உதயகுமாரை சேரில் இருந்து அவிழ்த்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். உடலில் காயங்களுடன் தடுமாறிய நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்த உதயகுமார், அவ்வழியாக வந்தவர்களிடம் உதவி கேட்டு அவர்கள் மூலமாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி போலீசார், உதயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தனிப்படை அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.