Skip to main content

மான் கொம்பு பதுக்கல்; நகைக்கடை அதிபர் உள்ளிட்ட 5 பேருக்கு அபராதம்! சப்ளை செய்த நபர் கைது!

Published on 23/03/2022 | Edited on 23/03/2022

 

Deer com hoarding; 5 fined, including jeweler

 

சேலத்தில், மான் கொம்பை பதுக்கி வைத்திருந்ததாக நகைக்கடை அதிபர் உள்ளிட்ட 5 பேருக்கு அபராதம் விதித்த வனத்துறை அதிகாரிகள், சப்ளை செய்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

 


சேலத்தில் புலி பல், புலி நகம், யானை தந்தம், நரி வால், நரி பல், மான் கொம்புகள் மூலம் ஆபரணங்கள் செய்து விற்பனை செய்யப்படுவதாக சென்னையில் உள்ள வனத்துறை கண்காணிப்புக்குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னையில் இருந்து வனத்துறை ஏ.சி.எப். மகேந்திரன் தலைமையிலான ஒரு குழுவும், சேலம் தெற்கு வனச்சரகர் சின்னத்தம்பி தலைமையிலான ஒரு குழுவும் சேலத்தில் உள்ள நகைக்கடைகளில் சில நாள்களுக்கு முன்பு திடீர் சோதனையில் இறங்கினர். 

 

சேலம் பஜார் தெருவில், உள்ள ஒரு நகைக்கடையில் 2 மான் கொம்பு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதே பகுதியில் வேறு சில நகைக்கடைகளில் சோதனை நடத்தியபோது சில துண்டுகள் சந்தனக்கட்டை, புலி நகங்கள், மேலும் ஒரு மான் கொம்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து நகைக்கடை அதிபர் மோகன் காந்தி, நந்து சேட் என்கிற நந்தகுமார், செந்தில், வெங்கடேஷ் பிரபு, ஆபரண கல் வியாபாரம் செய்து வரும் குமரேசன் ஆகியோரை வனத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். 

 

இவர்களுக்கு குமரேசன்தான் மான் கொம்புகளையும், புலி பல், புலி நகங்களையும் விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. அவர், சேலம் பஞ்சந்தாங்கி ஏரி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஜெயமந்திரி என்கிற அரவிந்த் என்பவரிடம் வாங்கியிருப்பது தெரிய வந்தது. நந்து சேட் என்கிற நந்தகுமார் கடையில் இருந்து கைப்பற்றப்பட்ட 5 புலி நகங்களும் போலியானவை என்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேநேரம் அவருடைய கடையில் இருந்து 1.77 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

 

வெங்கடேஷ்பிரபு, செந்தில் ஆகியோரிடம் இருந்து உடைந்த மான் கொம்பு துண்டுகள் கைப்பற்றப்பட்டன. இதற்காக இவர்கள் இருவருக்கும் தலா 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் விலங்கு பொருள்களை கடைக்காரர்களக்கு விற்பனை செய்த குமரேசனுக்கும், சந்தன கட்டைகளை பதுக்கி வைத்திருந்த நந்தகுமார் ஆகியோருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், மான் கொம்பை நகைக்கடையில் பதுக்கி வைத்திருந்த மோகன்காந்திக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 


அட்டவணைப்படுத்தப்பட்ட விலங்குகளின் பொருள்களை விற்பனை செய்ததாக ஜெயமந்திரி என்கிற அரவிந்த் கைது செய்யப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

கொடைக்கானலில் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest fire in Kodaikanal;Warning to tourists

கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.