Skip to main content

குண்டும் குழியுமான நாகை சாலை; புறக்கணிக்கும் அமைச்சர் ஒ.எஸ்.மணியன்!!

Published on 09/11/2018 | Edited on 09/11/2018

நாகப்பட்டினத்தில் போக்குவரத்து அதிகம் நிறைந்த சாலைகள் முழுவதும், மழையால் பாதிக்கப்பட்டு குண்டும், குழியுமாக மாறியிருக்கிறது. சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெருத்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

damaged road in nagai

 

கடந்த சில தினங்களுக்கு முன் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

 

 

இந்நிலையில், நாகப்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் பெரும்மழையால் நகரத்தில் உள்ள முக்கியமான சாலைகள், போக்குவரத்து நிறம்ப காணப்படும் சாலைகள் முழுவதும் சிதிலமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளன.

 

 

36 வார்டுகளைக்கொண்ட நாகை நகராட்சி சாலைகளும் பராமரிப்பு இல்லாமலும், மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படாமலும் இருப்பதால், மழைநீர் வெளியேற முடியாமல் சாலையிலேயே தேங்கி பல்வேறு நோய்களை உருவாக்கிவருகிறது. அதோடு கனமான வாகனங்களும் செல்வதால் சிதிலமடைந்து சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக மாறிவிட்டது.

 

damaged road in nagai

 

" நாகை பகுதியின் சாலைப் போக்குவரத்து என்பது, பொதுமக்களுக்கு சவாலாக மாறியுள்ளது. போக்குவரத்து நிறைந்த நாகை பழைய பேருந்து நிலையம், நீலாயதாட்சியம்மன் கோயில் தெற்குவீதி, மேலவீதி, புதிய பேருந்து நிலையம், பப்ளிக் ஆஃபீஸ் ரோடு  உள்ளிட்ட சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள், மாணவ, மாணவியர், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்." என்கிறார் சமுக ஆர்வளரும், முன்னாள் அக்கரைப்பேட்டை ஊ.ம.தலைவருமான.மனோகரன்.

 

 

"சாதாரணமா இருசக்கர வாகனங்களில் செல்வோர்களில் பெரும்பாலானோர் பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில்   உள்ள மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படாமல் போனதால், தண்ணீர் வெளியேற முடியாமல் சாலையிலேயே தேங்குகிறது. இதனால், சாலையில் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் ஏற்படுகின்றன.  மழைநீர் வடிகால்களை தூர்வார நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க  வேண்டும். " என்கிறார்கள் வர்த்தக சங்கத்தினர்.

 

 

நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில்,  பூம்புகார், சீர்காழி, வேதாரண்யம், மயிலாடுதுறை  ஆகிய  4 சட்டமன்றத்தொகுதிகள் அதிமுக வசமே இருக்கிறது, கீழ்வேளூர் தொகுதியை தவிர மீதமுள்ள நாகை தொகுதியும் அதிமுக ஆதரவு கட்சியான ம.ஜ.கவிடம் உள்ளது. கூட்டனி கட்சியாக இருந்தாலும் அமைச்சர் ஒ.எஸ்.மணியன் வேண்டுமென்றே நாகை தொகுதியை புறக்கணிக்கிறார்," என்கிறார் ம.ஜ.க பிரமுகர் ஒருவர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும்’ - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Rural roads will be improved  CM MK Stalin 

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024)  இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராமப்புறச் சாலைகள் திட்டம் குறித்து சட்டப்பேரவை விதி 110 இன் கீழ் பேசினார். அதில், “தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். நகரம், கிராமம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து வளர்ச்சிகளையும் வழங்கி வருகிறோம். அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி என்பதையே திராவிட மாடல் அரசின் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இதில் சாலை வளர்ச்சி என்பது மிக, மிக முக்கியமானது. நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் சாலை மேம்பாட்டை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள். கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள், கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு வறுமையை ஒழிப்பதில் முக்கியக் காரணியாக உள்ளன. 

Rural roads will be improved  CM MK Stalin 

தமிழ்நாட்டில் சுமார் 1 இலட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் உள்ளன. ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளை மேலும் மேம்படுத்தும் விதமாக ஒரு புதிய அறிவிப்பை இப்போது நான் வெளியிட விரும்புகின்றேன். ஊரகச் சாலைகளில் செய்யப்படும் முதலீட்டிற்கும் ஊரக மக்களின் நலனிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. சாலைகளின் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துச் சேவைகளின் மேம்பாடு என்பது ஊரகப் பகுதிகளில் வணிகச் செயல்திறனை அதிகப்படுத்துகிறது. அதன்மூலம், இடுபொருள் செலவினைக் குறைத்து வேளாண் உற்பத்தியினை அதிகரித்து, ஊரக வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. தரமான சாலைகள், கிராமப்புற மக்களின் வருமான அளவினை உயர்த்துகிறது. கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளை வழங்கி, அறிவாற்றலைப் பரவலாக்கி, சமூகப், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து வளர்ச்சியைத் துரிதப்படுத்த உதவுகிறது.

எனவேதான், பேருந்து செல்லக்கூடிய சாலைகள், குக்கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், பல்வேறு முக்கிய சேவைகளைக் கிராமங்களுடன் இணைக்கும் சாலைகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு  அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. அதன்படி, கடந்த 13-01-2023 அன்று என்னால் சட்டப்பேரவையில் ‘முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவீர்கள். இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி தற்போது வரை 8 ஆயிரத்து 120 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

Rural roads will be improved  CM MK Stalin 

முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி, பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டம், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழும் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 16 ஆயிரத்து 596 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மற்றும் 425 உயர்மட்ட பாலங்கள் அமைக்கத் திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 9 ஆயிரத்து 324 கோடியே 49 லட்சம் ரூபாய். இதனைத் தொடர்ந்து செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். வருகிற இரண்டு ஆண்டுகளில் ‘முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்’ மூலம் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

கேள்விக்குறியாகும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு? - கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Drivers are at risk of getting into an accident due to cattle lying on  road

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி பகுதியில் கால்நடை வைத்திருப்பவர்கள் காலையில் அவைகளை அவிழ்த்து விட்டுவிடுகின்றனர். இது காய்கறி கடைகள், பூக்கடைகள் உட்பட எல்லா இடங்களிலும் பொருட்களை சாப்பிடுகின்றன. மதிய நேரத்தில் அதன் உரிமையாளர்கள் வந்து பால் கறக்கும் மாடுகளில் சாலையிலேயே அமர்ந்து பால் கறந்துக்கொண்டு மீண்டும் அங்கேயே விட்டுவிடுகின்றனர். 

சாலையில் சுற்றி திரியும் இந்த கால்நடைகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வி.கோட்டா, பேரணாம்பட்டு சாலையில் கால்நடைகள் சாலையிலே ஹாயாக படுத்து உறங்கிக் கொண்டிருக்கின்றன. வெளியூர் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய  வாகனங்கள் கால்நடைகள் மீது மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. இருசக்கர வாகனங்கள் மாடுகள் மீது மோதி பலர் கீழே விழுந்து கை, கால்களில் சிராய்ப்பு, என பல பாதிப்புகளுக்குள்ளாகின்றனர். இதுக்குறித்து நகராட்சிக்கு, காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பலமுறை தகவல் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். இது பொதுமக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Drivers are at risk of getting into an accident due to cattle lying on  road

பெரியதாக உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் கால்நடைகள் சாலைக்கு வராமல் தடுத்து நடவடிக்கை எடுக்கும்படி பேரணாம்பட்டு பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை வைக்கின்றனர். கால்நடைகளை சாலையில் ஓட்டி விடும்  உரிமையாளர்களுக்கு அபராதமும் மீண்டும் மீண்டும் அப்படி செய்தால் மாடுகள் பிடித்து வைத்து நகராட்சி ஏலம் விடப்படும் என்கிற விதிகள் இருந்தாலும் நகராட்சி அலுவலர்கள் இதை நடைமுறைப்படுத்துவதில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் வாகன ஓட்டிகள்.