கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பெருமாத்தூரான் பகுதியை சேர்ந்தவர் வீரசேகரன் (வயது 30). இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் பண்ருட்டி அருகே உள்ள மருங்கூரை சேர்ந்த கவிப்பிரியா என்பவருக்கும் கடந்த கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது கவிப்பிரியா கருவுற்று 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். சில தினங்களுக்கு முன்பு கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கவிப்பிரியா கணவரை கோபித்துக் கொண்டு தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட வீரசேகரன் நேற்று காலை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வீரசேகரனை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வீரசேகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரசேகரன் தந்தை அறிவழகன் கொடுத்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குடும்பப் பிரச்சனை காரணமாக திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்ற விரக்தியால் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறிஞ்சிப்பாடி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.