Skip to main content

27 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நீதிமன்றத் தீர்ப்பு! 

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

Court verdict after 27 years!

 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ். இவர் கடந்த 1994-ம் ஆண்டு விருத்தாசலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுமார் 52 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு முந்திரி தோட்டத்தை டெண்டர் மூலமாக ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து உறுதிமொழி பத்திரம் எடுத்துள்ளார். இந்நிலையில் வனத்துறை அதிகாரிகள் செல்வராஜை சரிவர முந்திரி தோட்டத்தில் உற்பத்தி செய்வதற்கு அனுமதிக்காமல் இருந்துள்ளனர். இதனால் கடந்த பல வருடங்களுக்கு முன்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் செல்வராஜ் திருச்சி கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு வன அலுவலகத்திற்குச் சென்று தனக்கு வரக்கூடிய நிலுவைத் தொகையை வசூல் செய்யும் விதமாக ஜப்தி செய்து கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்தது.

 

இதனால் இன்று காலை 10 மணிக்கு செல்வராஜ் மற்றும் ஸ்ரீரங்கம் நீதிமன்ற ஊழியர் செல்வம் உட்பட பலர் திருச்சி கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள வன அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது ஜப்தி செய்வதற்காக உள்ளே இருந்த ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயரதிகாரிகள் இல்லாத காரணத்தினால் இன்று ஒரு நாள் கால அவகாசம் கொடுங்கள் நாளை அதிகாரி வந்தவுடன் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறினர். 

 

இதையடுத்து செல்வராஜ் கூறுகையில்,  ''நான் முந்திரி பருப்புகளை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தேன். அதற்காக ஆண்டிமடம் அருகே உள்ள ஒரு இடத்தை டெண்டர் மூலம் ஏலம் எடுத்தேன். ஆனால் சிறிது காலம் கூட என்னால் அந்த தொழிலை அந்த இடத்தில் மேற்கொள்ள முடியவில்லை. இதனால் நான் கட்டிய பணத்தை திரும்பச் செலுத்துமாறு கேட்டேன். அதிகாரிகள் மறுத்தனர். இதனால் நான் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு கடந்த 27 வருடமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்குக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். 2014 ஆம் ஆண்டு தீர்ப்பு வந்தது. அதன் தொடர்ச்சியாக 2016ல் ஜப்தி செய்து கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்தது. அப்போது பேச்சுவார்த்தை நடத்தி என்னை திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்கள். உயரதிகாரிகள் வன அலுவலகத்தில் இல்லை. அதனால் ஊழியர்கள் எங்களை நாளை காலை வருமாறு கூறினர். அதை ஏற்று நாங்களும் இன்று சென்றுவிட்டு நாளை காலை மறுபடியும் வந்து ஜப்தி செய்வோம் என்று கூறியுள்ளேன்'' இவ்வாறு தெரிவித்தார். இதனால் திருச்சி கம்பரசம்பேட்டை வன அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

கொடைக்கானலில் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest fire in Kodaikanal;Warning to tourists

கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.