Skip to main content

ஊரடங்கு உத்தரவைத் திரும்பப்பெற உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி!- உயர்நீதிமன்றம்!

Published on 23/05/2020 | Edited on 23/05/2020

 

coronavirus lockdown tamilnadu govt insurance chennai high court


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, கடந்த மார்ச் மாதம் 22- ஆம் தேதி முதல், நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 4- ஆம் கட்ட ஊரடங்கு மே 31- ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
 


இந்த ஊரடங்கு உத்தரவைத் திரும்பப்பெற உத்தரவிடக் கோரி விருதுநகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், மற்ற வைரஸ் கிருமிகளைப் போல கரோனா வைரஸும் நீர் மற்றும் காற்று மூலம் பரவக் கூடிய சாதாரண வைரஸ் என லண்டன் வைரஸ் அறிவுரைக் குழு கூறியிருக்கிறது. இதை  மருத்துவமனையில் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி விடலாம். தமிழகத்தில் முதலமைச்சர் சிறப்பு மருத்துவக் காப்பீடு மூலம் கரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால், நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதை மீட்க வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். கரோனா தொற்றைக் குணப்படுத்த ஆயுர்வேதம் மற்றும் ஆங்கில மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். ஆகவே, நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவைத் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
 

 


இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.டி. ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, மனுதாரர் கூறும் விஷயத்தை ஆராய இந்த நீதிமன்றத்திற்கு எந்த நிபுணத்துவமும் இல்லை எனக்கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்