தனியார் அறக்கட்டளை மூலமாக வருடா வருடம் குழந்தைகள் நலனுக்காக பாடுபட்டு வரும் அரசு அதிகாரிகளுக்கும், சேவை புரிபவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் கோயம்புத்தூர் ராம்நகரில் உள்ள தனியார் மஹாலில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் மனநலம், செவி மாற்றுத்திறன், கை, கால் மாற்றுத் திறன் கொண்டவர்களின் கல்விக்கும் பாதுகாப்புக்களுக்கும் சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அதில் கோயம்புத்தூர் டி.ஐ.ஜியான முத்துசாமிக்கு விருது வழங்கப்பட்டது. குழந்தைகள் நலனுக்காக சட்டத்தை திறம்பட அமல்படுத்தி போக்சோ சட்டத்தின் கீழ் இந்த ஒரு வருடத்தில் 48 வழக்குகளை பதிவு செய்துள்ளார். அதில் குறிப்பாக உடுமலைப்பேட்டையில் நடந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு 72 வருடம் தண்டனை பெற்றுக் கொடுத்து அதற்கான அச்சத்தை ஏற்படுத்தி குற்றங்களை நடக்காதவண்ணம் வித்திட்டுள்ளார். இது போல நீலகிரி, ஈரோடு, திருப்பூர் என அத்தனை மாவட்டங்களிலும் தற்போது போக்சோ சட்டத்தின் மூலமாக இவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கையாலும் குழந்தைகள் நலம் காப்பாற்றப்பட்டு வருகிறது என அந்த அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய டி.ஐ.ஜி. முத்துசாமி, “சட்டத்தை சரிவர செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். குழந்தைகள் நலம் ஒரு போதும் காவல்துறையால் கெட்டுப்போகாது. அதற்கான மக்களுக்காகத்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அவர்களின் நலனை பாதுகாப்பதே எங்களின் கடமை. இந்த விருது மேலும் எங்களை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது” என்றார்.