Skip to main content

காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த இளைஞன் கைது...

Published on 20/07/2020 | Edited on 20/07/2020
ri

 

காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தப்பியோடிய இளைஞர் கைது செய்யப்பட்டார். 

 

கோவை பேரூர் எம்.ஆர்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், இவரது மகள் ஐஸ்வர்யா, அப்பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரத்தீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. 

 

ஐஸ்வர்யாவின் பெற்றோர் ஐஸ்வர்யாவையும், ரத்தீஷ் ஆகிய இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் ஐஸ்வர்யா இந்த மூன்று மாதங்களாக ரத்தீஷை சந்திப்பதை தவிர்த்து வந்திருக்கிறார். தன்னுடன் பேசுமாறு ஐஸ்வர்யாவை பலமுறை ரத்தீஷ் வலியுறுத்தி வந்துள்ளார். ஐஸ்வர்யா இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால் பலமுறை ரத்தீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

இந்தநிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் ஐஸ்வர்யாவைத் தேடிச் சென்ற ரத்தீஷ், தன்னிடம் தொடர்ந்து பேசுமாறும் காதலிக்குமாறும் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த ஐஸ்வர்யாவின் தந்தை சக்திவேல் அங்கு வந்துள்ளார். அப்போது ஐஸ்வர்யாவை ரத்தீஷ் கத்தியால் நான்கு இடங்களில் குத்தியதாகவும், அதனைத் தடுக்க வந்த அவரது தந்தை சக்திவேலையும் கத்தியால் குத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

காயமடைந்த ஐஸ்வர்யா மற்றும் சக்திவேல் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சக்திவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

 

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஸ்வர்யா மற்றும் ரத்தீஷ் ஆகிய இரு குடும்பத்தினரையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ரத்தீஷை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கேரள மாநிலம் பாலக்காட்டில் போலீசார் கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.